தேமுதிகவை பிரேமலதா கூறு போட்டு விற்கிறார்! ஆனால் வாங்கத்தான் யாருமில்லை! நாஞ்சில் சம்பத் தாக்கு
நெல்லை: விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சியை பிரேமலதா விஜயகாந்த், கூறு போட்டு விற்பனை செய்ய முயற்சிக்கிறார், ஆனால் வாங்குவதற்குத்தான் ஆளில்லை என தவெக பிரச்சார செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பொதுக்கூட்டத்தில், அதன் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: மூப்பனார் துவக்கிய தமாகாவை ஜி.கே. வாசன், மோடியிடம் அடகு வைத்துவிட்டார். அது போல் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவை பிரேமலதா கூறுபோட்டு விற்பனைக்குத் தயாரான போதும், "வாங்க ஆளில்லை.
இஸ்லாமிய மக்களுக்கு பா.ஜ.க. அரசு பல இன்னல்கள் இழைத்ததோடு, மாட்டிறைச்சி உண்ண, விற்க தடை சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் கொண்டுவந்தது எனக் குற்றம்சாட்டினார். இத்தகைய பா.ஜ.க.வுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதையும் நாஞ்சில் சம்பத் தனது பேச்சில் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோரே பா.ஜ.க.வினர் என சுட்டிக்காட்டினார். "நான் என்ன சாப்பிட வேண்டும், எந்த உடை அணிய வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன். டெல்லியில் இருந்துவரும் கட்டளைகளை ஏற்றுக் கொள்ள முடியாது," என்றார் நாஞ்சில் சம்பத்.
தமிழ் தேசியம் பேசும் சீமான் ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவதாகவும் அவர் கூடுதலாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த தேர்தல் முடிவதற்குள் சீமானின் சின்னத்தை கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.
அரசியல் மாற்றத்திற்காக வந்த கமல்ஹாசன், இப்போது அறிவாலயத்தில் தாழ்வாரத்தில் படுத்துக் கிடக்கிறார். எங்கள் தளபதி விக்கிரவாண்டியில் ராம்ப்வாக் சென்றார், அதற்கு அவருக்கு தகுதி இருக்கிறது. யானை ஆட்டுகிறது என்பதற்காக கழுதையும் ஆட்டலாமா?
சேப்பாக்கம் விசில் ஊத தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே திமுகவினரை பார்த்தால் அவர்களின் செவி கிழியும் அளவுக்கு விசில் ஊதுங்கள் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவை திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனும் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், விஜயகாந்த் இருந்தபோது தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தது. இல்லை என்று நாம் சொல்ல முடியாது. தேமுதிக இரு கட்சிகளிடமும் கூட்டணி பேசக்கூடாது. இங்கேயும் பேசுவது, அங்கேயும் பேசுவது என்பது சரியாக வராது. விசுவாசமாக இருந்தால் ஒரு பக்கம்தான் இருக்க வேண்டும் என்றார்.
இதைதத் தொடர்ந்து மேலும் தேமுதிக குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது ராஜகண்ணப்பன், தேமுதிகவெல்லாம் ஒரு கட்சியா,பெரிய கட்சிகளை பற்றி கேளுங்கள் என்றார். இதற்கு பிரேமலதா பதிலளிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் தேமுதிகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என சொல்லும் போது நாங்கள் 2 பக்கமும் பேசுவதாக தவறான செய்தியை யார் சொல்கிறார்கள் என தெரியவில்லை.
தேமுதிக எப்படிப்பட்ட கட்சி என்பது மக்களுக்கு தெரியும். அது போல் ராஜகண்ணப்பன் எப்படிப்பட்டவர்கள் என்பதும் அனைவரும் அறிவர். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications