Balveer Singh: பற்களை பிடுங்கிய வழக்கில் சிக்கிய பல்வீர் சிங்கிற்கு புதிய பதவி.. அதிரடிப்படையில் முக்கிய பொறுப்பு
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்த போது, அங்கு விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் (Balveer Singh) மீண்டும் தமிழக காவல்துறை பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு அதிரடிப்படை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆக நியமனம் மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்த்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறைக்கு பொறுப்பு அதிகாரியான பல்வீர் சிங், சிறிய குற்றங்களுக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பற்களை பிடுங்கியதாக வழக்கு
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த விவகாரம் ஏற்படுத்தியது. புகாரின் அடிப்படையில், பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவர் மீது நெல்லை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்றது. இந்த சூழ்நிலையில், பல்வீர் சிங் மீதான பணியிடை நீக்கம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பழிவாங்கும் நோக்கத்தில் பொய் புகார்
ஆனால், விசாரணை முடிவடைந்த நிலையில், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன் பல்வீர் சிங்கை பாதுகாக்க தமிழக அரசு முயற்சித்து வருவதாக புகார் எழுந்தது. இதற்கிடையே, தன் மீதான வழக்கையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்யக்கோரி ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், உயர் நீத்மன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், பல்வீர்சிங் மீதான வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஷமீம் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்வீர் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பழிவாங்கும் நோக்கத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டதாகவும், எனவே, வழக்கையும் குற்றப்பதிரிகையையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
கோர்ட் உத்தரவு
அப்போது அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல்வீர் சிங் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இந்த வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்படுகிறது, என உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
சிறப்பு அதிரடிப் படையில் பொறுப்பு
இதற்கிடையே, பல்வீர் சிங் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 8-வது பட்டாலியன் உதவி கமாண்டன்டாக அவர் நியமனம் செய்யப்பட்டார்.
பல்வீர் சிங் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவும் பிறப்பித்து இருக்கும் நிலையில் பல்வீர்சிங், ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications