பல் பிடுங்கிய விவகாரம்! பல்வீர் சிங் மீது குவியும் புகார்கள்.. களத்தில் இறங்கிய அமுதா ஐஏஎஸ்!
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே விசாரணை கைதிகளின் பற்களை போலீசார் பிடுங்கிய விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இன்று ஐஏஎஸ் அதிகாரி அமுதா தனது விசாரணையைத் தொடங்கினார்.
திருநெல்வேலியில் உள்ள அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் டிவி சேனல்களுக்கு அளித்த பேட்டியும் பரபரப்பைக் கிளப்பியது.
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங் என்பவர் தான் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்த விவகாரம் மாநிலத்தையே அதிரச் செய்த நிலையில், மனித உரிமை ஆணையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் ஸ்டாலினும் இது குறித்து சட்டசபையில் விளக்கமளித்திருந்தார். சம்பந்தப்பட்ட பல்வீர்சிங் முதலில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு, அதன் பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல வேறு சில காவலர்களும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இதற்கிடையே புகார் அளித்தவர்களைப் பிறழ் சாட்சியாக மாற்ற வேலைகள் நடப்பதாகவும் இதற்காக அவர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகவும் கூட தகவல்கள் வெளியானது. கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி, சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம் இந்தச் சம்பவத்தை விசாரித்தார். அவர் நேற்று முதற்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார்.
இருப்பினும் பல்வீர்சிங்கும், சப் கலெக்டர் முகமது சபீர் ஆலமும் ஒரே காலத்தில் தேர்வானவர்கள் என்பதால் விசாரணை முறையாக நடக்காது என்றும் இதனால் வழக்கை வேறு ஒரு உயர் அதிகாரி விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இந்தச் சூழலில் தான் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலர் அமுதாவை விசாரணை அதிகாரியாகத் தமிழ்நாடு அரசு நியமித்தது.

அவர் நேற்று திருநெல்வேலிக்கு சென்ற நிலையில், தனது விசாரணை இன்று காலை தொடங்கினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் சிறப்பு அதிகாரி அமுதா விசாரணை தொடங்கினார். பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து வாக்குமூலம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே சப் கலெக்டரிலும் வாக்குமூலம் அளித்தவர்கள், கூடுதலாக எதாவது சொல்ல விரும்பினால் மீண்டும் முதன்மை செயலாளரை நேரில் சந்தித்து வாக்குமூலம் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள், இதுவரை புகார் அளிக்காதவர்கள், கூடுதல் தகவல் அளிக்க விரும்புபவர்கள் சிறப்பு அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருந்தார்.
நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க முடியாவிட்டால் [email protected] என்ற ஈமெயில் முகவரிக்குப் புகார் அனுப்பலாம் என்றும், 8248887233 ஆகிய எண்ணிலும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருக்கிறார்.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த ராஜ்குமார், போகபூமன், சந்திரசேகரன், பி.ராஜகுமாரி, ஏ.பெருமாள், என்.சக்தி நடராஜன், எம்.சந்தானகுமார், வி.மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications