இது ஆணவக் கொலை தான்.. தூத்துக்குடி ஐடி ஊழியர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தூத்துக்குடி: காதலித்தாரா இல்லை நட்புடன் பழகினாரா என்று தெரியாமலேயே கொன்றிருக்கிறார்கள் என்றால் இது ஆணவக் கொலை தான்.. பெண்ணின் தாய் தந்தையை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என நெல்லையில் வெட்டி கொலை செய்யப்பட்ட கவின் குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வீட்டின் முன்பு போராட்டம் செய்து வருகிறார்கள். வேண்டும் என்றே திட்டம் போட்டு வர வைத்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி கொன்று இருக்கிறார்கள் என்றும் கவின் குமாரின் உறவினர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வசித்து வருபவர் கவின் குமார் (வயது 28). பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இவரது தந்தை விவசாயி. கவின் குமார் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணி செய்து வந்தார். நேற்று ஊருக்கு வந்திருந்த நிலையில் தன் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்தது.

அப்போது கவின் குமாரை ஆஸ்பத்திரிக்கு வெளியில் வர வைத்த நபர் ஒருவர் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. கவின் குமாரை வெட்டி கொன்றது நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணின் மகன் சுர்ஜித் என்பது தெரியவந்தது.
சுர்ஜித் மற்றும் அவரது அக்கா ஆகிய இருவரும் தூத்துக்குடியில் இருந்த போது, பள்ளியில் படித்து வந்த போது கவின்குமாரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 3 பேரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இதில் கவின் குமார் மற்றும் சுர்ஜித்தின் அக்கா இருவரும் காதலித்ததாகவும் தெரிகிறது. இருவரும் தற்போது வரை பேசி வந்ததாக கூறப்படுகிறது. அப்படித்தான் சென்னையில் இருந்து வந்த கவின் குமார் அவரை பார்ப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சுர்ஜித்துக்கு பட்டியல் இனத்தை சேர்ந்த கவின் குமாரிடம் அக்கா பேசி வருவது பிடிக்கவில்லை. இதுபற்றி அக்காவிடம் அடிக்கடி கூறியும் அவரும் கேட்காமல் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கவின் குமார் பாளையங்கோட்டை வந்திருப்பது தெரிந்து அரிவாளோடு சுர்ஜித் அங்கு வந்து அவரை தனியாக பேச வருமாறு அழைத்துள்ளார். ஒரு மரத்தடியில் வைத்து பேசிக்கொண்டிருந்த போது, இனி என் அக்காவிடம் பேசக்கூடாது என்று கூறியதாகவும், ஆனால் அவர் வாக்குவாதம் செய்ததாலும் ஆத்திரமடைந்த சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
அங்கிருந்து தப்பி ஓட முயன்ற கவின் குமாரை ஓடிச்சென்று விரட்டி வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் நெல்லை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் இருந்து தூத்துக்குடி ஏரலில் உள்ள அவரது வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட இருந்தது.
ஆனால் உடலை வாங்க மறுத்து கவின் குமாரின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களாக உள்ள சுர்ஜித்தின் தாய், தந்தை இருவரையும் சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும், அவர்களது தூண்டுதலினாலேயே எங்க பையனை கொன்று இருக்காங்க.
வேண்டும் என்றே திட்டம் போட்டு வர வைத்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி கொன்று இருக்கிறார்கள்.. இல்லையென்றால் அவனை இப்படி பண்ணியிருக்க முடியாது. ரொம்ப அமைதியான பையன்.. இருவரும் காதலித்தனர் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.. அவங்க காதலிக்கவில்லை என்று சொல்கிறார்கள். காதலித்தாரா இல்லை நட்புடன் பழகினாரா என்று தெரியாமலேயே கொன்றிருக்கிறார்கள்.. இது ஆணவக் கொலை தான்.. பட்டியலின பையன் என்பதாலேயே கொன்றிருக்கிறாங்க.. பெண்ணின் தாய் தந்தையை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்" என்று கூறினர்.
இதற்கிடையே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களான சரவணன், கிருஷ்ணகுமாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுர்ஜித் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications