கரூரில் 41 பேர் அடித்து கொலை.. விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
நெல்லை: கரூர் மாவட்டத்திற்கு விஜய் சென்றால், அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தள்ளுமுள்ளுவை காரணம் காட்டி விஜய்யை போட்டு தள்ளிவிட்டால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், கரூரில் 41 பேரை அடித்து கொன்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது முதல்வர் ஸ்டாலின் நள்ளிரவிலேயே தனி விமானத்தில் புறப்பட்டு கரூர் அரசு மருத்துவமனை வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். அடுத்த நாள் காலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கரூர் அரசு மருத்துவமனை வந்தார்.

தவெக தலைவர் விஜய்யை தவிர்த்து முக்கிய அரசியல் கட்சிகள் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர். இதனிடையே கரூர் செல்வதற்காக விஜய் காவல்துறையினரிடம் அனுமதி கோரி இருக்கிறார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கரூரில் 41 படுகொலை நடந்திருக்கிறது. காவல்துறையினர் லத்தி சார்ஜ் செய்துள்ளனர்.
இதற்கு யார் காரணம்? யாரின் ஆட்சியில் நடந்திருக்கிறது.. திமுக ஆட்சியில் நடந்த சம்பவம் தொடர்பாக கூட்டணி கட்சிகள் யாரும் கேட்பதே இல்லை.. விஜய் கரூர் சென்றிருந்தால், அவரின் உயிருக்கு யார் உத்தரவாதம் கொடுக்க முடியும்? அவரையே அடித்து கொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 41 பேரை அடித்து கொன்றார்கள்.. அதுபோன்று விஜய்க்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதால், பாதுகாப்பு கோரி இருக்கிறார்கள்.
விஜய் கரூர் சென்ற போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மீண்டும் கரூர் மாவட்டத்திற்கு விஜய் சென்றால், அவரைப் பார்க்க கூட்டம் வரும். தள்ளுமுள்ளு ஏற்படும்.. தள்ளுமுள்ளுவை சாக்காக வைத்து விஜய்யை காலி செய்துவிட்டால் என்ன செய்வது? கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் பொறுப்பு. அதற்கு மக்கள் சட்டசபைத் தேர்தலில் தகுந்த முடிவு எடுப்பார்கள்.
திமுகவால் விஜய்க்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் ஆபத்து இருக்கிறது. அதேபோல் அக்டோபர் 12 முதல் எனது தமிழக சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது. ஜேபி நட்டா பீகார் தேர்தல் பணிகள் காரணமாக பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வார். கரூர் சம்பவத்திற்கு பின் காவல்துறையின் அறிவுறுத்தலை பின்பற்றி சுற்றுப்பயணம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications