கவின் ஆணவக்கொலை! சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் மனு.. 2வது முறையாக தள்ளுபடி
திருநெல்வேலி: மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக விண்ணப்பித்திருந்தார். ஆனால் நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.
கவினை சுர்ஜித் என்பவர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த கொலைக்கு சுர்ஜித்தின் தந்தை சரவணன் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, சரவணன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஐடி ஊழியர் கவின்குமார். கடந்த ஜூலை 27ஆம் தேதி இவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் காவல்துறை விசாரணை பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தன. பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் கவின்குமார். இவரும் திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றும் சுபாஷினியும் சிறுவயதில் இருந்து பள்ளி நண்பர்களாக இருந்திருக்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர்.
இந்த விவகாரம் சுபாஷினியின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி சுபாஷனியின் சகோதரர் சுர்ஜித், காதல் விவகாரம் தொடர்பாக பெற்றோர் பேச அழைக்கிறார்கள் என்று சொல்லி கவினை அணுகி இருக்கிறார். பிற்பகல் சுமார் 2 மணி அளவில் கவினை பைக்கில் அழைத்துக் கொண்டு சுர்ஜித் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் பைக்கை நிறுத்திவிட்டு, கவினுடன் சுர்ஜித் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த வாக்குவாதத்தின் போது சாதி ரீதியாக பேசி இழிவு படுத்தியும் இருக்கிறார். வாக்குவாதம் உச்சகட்டத்தை எட்ட, தான் மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து கவினை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவத்தில், கவின் முதல் 4 வெட்டிலேயே உயிரிழக்க.. ஆத்திரம் தீராமல் அடுத்தடுத்து சுர்ஜித் வெட்டி இருக்கிறார். வெட்டுகளை பார்க்கும் போது கூலிப்படையினர் வெட்டுவதை போல இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்படியெனில் இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கிறதா என்றும் கேள்வி எழுந்திருந்தது.
மட்டுமல்லாது குறிப்பிட்ட இடத்தில் முன்கூட்டியே எப்படி அறிவாள் மறைத்து வைத்திருப்பட்டது? என்றும் கேள்விகள் எழுந்திருந்தன. இதில் கவின் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். சுர்ஜித் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். எனவே சாதி வெறியால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சுர்ஜித், கவல்துறை அதிகாரிகளாக இருக்கும் அவரது தந்தை சரவணன்-தாய் கிருஷ்ணவேணி என மூவரும் கைது செய்யப்பட்டிருக்கினர். இதில் சரவணன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து மீண்டும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications