குடிகார பயல்கள்.. திடீரென டென்ஷன் ஆன சாட்டை துரைமுருகன்! நெல்லை நாதக கூட்டத்தில் பரபரப்பு
நெல்லை: நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் போதையில் இருந்த நபர் ஒருவர், சாட்டை துரைமுருகனை பற்றி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த சாட்டை துரைமுருகன் ஏய் என்று கத்தியபடி.. குடிகார பயல்கள் என கூறியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. வரும் ஏப்ரல் மாதம் மத்தியில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

பிரசாரம் தொடங்கிய நாம் தமிழர்
திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் வழக்கம் போல சீமான் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் 8 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெற்று கவனம் ஈர்த்த சீமான் கட்சி, இந்த முறை விஜய் முதல் முறையாக தேர்தல் களம் காண்பதால், கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
சீமானின் வாக்கு வாங்கிக்கு விஜய் கட்சி வருகையால் பாதிப்பு ஏற்படும் என்பது அரசியல் விமர்சகர்கள் பார்வையாக உள்ளது. பிற கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு என பரபரப்பாக இருக்க சீமானின் நாம் தமிழர் கட்சி முதல் ஆளாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டது.
டென்ஷன் ஆன சாட்டை துரைமுருகன்
அந்த வகையில், நெல்லை தொகுதியில் வேட்பாளராக பா. சத்யா நிறுத்தப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நெல்லை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை அறிமுகப்படுத்தி அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசினார்.
அப்போது கூட்டத்தில் போதையில் இருந்த நபர் ஒருவர், சாட்டை துரைமுருகனை பற்றி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த சாட்டை துரைமுருகன் ஏய் என்று கத்தியபடி ஆவேசமாக மைக்கை விட்டு விலகி வந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த போதை ஆசாமியை சுற்றிவளைத்து தாக்க தொடங்கினர்.
இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய சாட்டை துரைமுருகன், ஒன்னும் இல்லை.. ஒன்னும் இல்லை.. விடுங்க.. குடிகார பயல்கள்.. சரி விடுங்க! நீங்க உட்காருங்க. இதை மாதிரி நிறைய.. உட்காருங்க என்று கூறி மீண்டும் தனது பேச்சை தொடங்கினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் உண்டானது.












Click it and Unblock the Notifications