சபாநாயகர் அப்பாவு மகனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு! ஒன்றிய செயலாளராக நியமனம்
நெல்லை: நெல்லை, வள்ளியூர் வடக்கு திமுக ஒன்றிய செயலாளராக சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய செயலாளராக இருந்த கிரகாம்பெல், மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், அலெக்ஸ் அப்பாவுவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை சபாநாயகராகச் செயல்பட்டு வருகிறார் அப்பாவு. ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவான அப்பாவு, 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர். பின்னர் அதே தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி வாகை சூடி, 2001 ஆம் ஆண்டிலும் எம்.எல்.ஏ ஆனார்.

பின்னர் அவர் திமுகவில் சேர்ந்து 2006 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். அந்த முறையும் எம்.எல்.ஏ.வாகி அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணியாற்றினார். 2011-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதி தி.மு.க கூட்டணி கட்சிக்கு வழங்கப்பட்டது.
அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டார். அதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.கவின் இன்பதுரையிடம் அப்பாவு வெற்றியை பறிகொடுத்தார். ஆனால் இந்தத் தேர்தலில் 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய 3 சுற்றுகளில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. நீதிமன்றம் வாக்குகளை எண்ணி முடித்தபோதிலும், அதன் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த முறையீட்டின் காரணமாக தீர்ப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் 2021 சட்டசபை தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இன்பதுரையை விட 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று அப்பாவு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அண்மையில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக-வை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்தது திமுக தலைமை. நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளராக ஆவுடையப்பனை நியமித்த திமுக தலைமை, நெல்லை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக கிரகாம் பெல்லை நியமித்தது.
இந்நிலையில் தான் கிரகாம்பெல் வகித்து வந்த வள்ளியூர் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் பதவி சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அலெக்ஸ் அப்பாவு நெல்லை கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அப்பாவுவின் மகன் அலெக்ஸ் கடந்த 2024 லோக்சபா தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட அலெக்ஸ் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications