தென்காசி பஸ் விபத்தால்.. நிர்கதியாய் நிற்கும் மாற்றுத்திறனாளி பெண்.. நெஞ்சை உறையவைக்கும் சோகம்
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் பலியானவர்களில் ஒருவரான மல்லிகா என்பவருக்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் உள்ளார். தந்தை இல்லாத நிலையில், தாயின் அரவணைப்பில் இருந்த மாற்றுத்திறனாளி தற்போது நிர்கதியாய் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து தென்காசி நோக்கி ஒரு தனியார் பேருந்து திங்கள் கிழமை காலை புறப்பட்டு சென்றது. இதேபோல் தென்காசியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி மற்றொரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது.

தென்காசி பஸ் விபத்து
இந்த 2 பேருந்துகளிலும் தலா 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். காலை 9.50 மணிக்கு 2 பஸ்களும் கடையநல்லூர் அருகே இடைகால் பக்கமுள்ள துரைச்சாமியாபுரம் காமராஜர் நகர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் புளியங்குடி டி.என். புதுக்குடியைச் சேர்ந்த வனராஜ் (67), இவருடைய மனைவி சண்முகத்தாய், முத்துராமன் மனைவி மல்லிகா (55), ஆலங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி கற்பகவல்லி (45), கடையநல்லூரைச் சேர்ந்த உலகா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி (55), பனவடலிசத்திரம் சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி முத்துலட்சுமி (35), சண்முகையா மனைவி சுப்புலட்சுமி (52) ஆகிய 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உருக்கமான தகவல்கள்
மேலும் படுகாயமடைந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகளை நெல்லை, தென்காசி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 பேரை காவு வாங்கிய இந்த விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.
மாற்றுத்திறனாளி
இந்த விபத்தில் உயிரிழந்த புளியங்குடி டி.என். புதுக்குடியைச் சேர்ந்த மல்லிகாவுக்கு ஒரு மகன் மற்றும் கார்த்திகா (33) உள்ளிட்ட 2 மகள்கள் உள்ளனர். கார்த்திகா பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். மல்லிகாவுக்கு திருமணமான சில ஆண்டுகளில் கணவர் இறந்தார். இதனால், மல்லிகா பீடி சுற்றி, தனது மூன்று பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். மல்லிகாவின் வயதான தாயாரையும் பராமரித்து வந்து உள்ளார்.
இந்த சூழலில்தான், துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற மல்லிகா, பேருந்து விபத்தில் பலியாகினர். விபத்தில் தாயை பறிகொடுத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி கார்த்திகா கண்ணீர் மல்க கூறியதாவது:- ''எனது தாயார் மல்லிகா ஆயக்குடி பகுதியில் நடந்த உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு உறவினர்களுடன் பேருந்தில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார்.
நிர்கதியாக உள்ளேன்
தாயாரின் அண்ணன் ஐயப்பன் குடும்பத்தினரும் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சிறுவயதிலேயே தந்தையை இழந்த எங்களை பீடி சுற்றி வளர்த்து படிக்க வைத்த தாயாரும் இறந்து விட்டார். எனது அண்ணனுக்கும், அக்காளுக்கும் திருமணமாகி விட்டது. நான் நிர்கதியாக உள்ளேன் என்று கதறி அழுதார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கார்த்திகா ஏம் ஏ ஆங்கிலம், பிஎட் படித்து விட்டு, இருமுறை டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications