Tenkasi: Tenkasi: தென்காசி திருடனுக்கு புத்தியோ புத்தி.. வீடு புகுந்து கொள்ளையடித்துவிட்டு மறுநாளே செய்த செயல்
தென்காசி: கட்டுக் கட்டாக பணம், தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடிய கொள்ளையன் சிறிது நேரத்தில் போலீசுக்கு பயந்து நகை, பணத்தை மீண்டும் கொள்ளையடித்த வீட்டிலேயே போட்டு சென்ற சம்பவம் தென்காசியில் அரங்கேறி உள்ளது. வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருப்பதை அறிந்து உள்ளே புகுந்து ரூ.30 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த நிலையில் போலீசில் மாட்டிவிடுவோம் என பயந்து மறுநாள் காலையில் அந்த பணப்பையை வீட்டின் வாசலில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
தென்காசி மாவட்டம் பாம்பகோவில் சந்தை அருகே வசித்து வருபவர் மாரியப்பன் (வயது 58). பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது மனைவி பார்வதி. இவரது தாய் மாரியம்மாளும் இவர்களுடன் ஒன்றாக வீட்டில் வசித்து வந்தார்.

பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த நபர்
இந்த நிலையில் வீரவநல்லூரில் உள்ள திருமண விழாவில் பங்கேற்பதற்காக மாரியப்பனும் பார்வதியும் சென்றுவிட்டனர். நேற்று முன் தினம் காலையில் மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். பர்தா அணிந்தபடி வீட்டுக்குள் புகுந்த அவர் மாரியம்மாளை தலையில் தாக்கினார்.
இதில் அவர் மயக்கமடைந்த நிலையில் வீட்டின் பீரோவை தேடிப்பிடித்து, அதில் இருந்த நகை பணத்தை அள்ளினார். கட்டுக் கட்டாக பணத்தையும் நகைகளையும் ஒரு பையில் அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த நிலையில் மாரியப்பன் மற்றும் பார்வதி வீட்டுக்கு வந்தபோது மாரியம்மாள் மயங்கிய நிலையில் கிடந்தார்.
நகை, பணம் கொள்ளை
இதையடுத்து அவரை எழுப்பினர். அப்போது நடந்த சம்பவத்தை கூறினார். இதன்பின்னர் மாரியப்பன் போலீசில் புகார் அளித்தார். ரொக்கமாக ரூ.7 லட்சம் இருந்தது. இதேபோல் நகை சுமார் 23 லட்சம் மதிப்பிலான நகை இருந்தது என கூறியிருந்தார். இந்த புகாரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் அக்கம் பக்கத்தினர் சிலர் பார்வதியிடம் உங்க வீட்டு வாசலில் பை ஒன்று கிடக்கிறது என சொல்லியிருக்கிறார்கள். அந்த பையை எடுத்து பார்த்த போது அதில் கொள்ளை போன நகை, பணம் இருந்தது. இந்த பையை பார்த்ததும் மகிழ்ச்சியில் குடும்பத்தினர் திகைத்தனர். உடனே போலீசாரிடம் இது குறித்து தெரியப்படுத்தினார்.
கொள்ளையனை பிடிக்க தீவிர விசாரணை
எனினும் போலீசார் அந்த கொள்ளையன் யார் என்பது குறித்தும் அவரை பிடிக்கவும் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசில் புகார் அளித்ததும் பயந்து போய் அவர் நகை, பணத்தை வீட்டின் முன் வந்து போட்டுவிட்டாரா அல்லது அக்கம் பக்கத்தில் தெரிந்தவர் யாரும் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு, பின்னர் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் போட்டு சென்றனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்டு காலை நேரத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications