Nanguneri: இரட்டை கொலையில் நாங்குநேரி சின்னதுரையை தாக்கிய இருவருக்கு தொடர்பு! வெளியான பரபரப்பு தகவல்கள்
நெல்லை: நெல்லை நாங்குநேரி இரட்டை மர்டர் வழக்கில் நேற்று மாலையில் 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், புதிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளனர். அதாவது முன்பு நாங்குநேரி மாணவர் சின்னதுரையை தாக்கியவர்களில் இருவர் இந்த சம்பவத்திலும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமம் உள்ளது. இங்குள்ள இந்திரா காலனியில் நேற்று முன் தினம் சிலர் டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் 9 பேர் வந்தனர்.

கண்ணில் படுபவர்களை வெட்டி சாய்த்தனர்
அப்போது அந்த கும்பலினர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் டீக்கடையில் நின்றவர்களை நோக்கி பெட்ரோ குண்டை வீசினர். பின்னர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்ணில் படுபவர்களை வெட்டி சாய்த்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இபடியே கடம்போடு வாழ்வு கிராமத்திலும் சிலரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடிக்கொண்டும் தப்பி சென்றனர். எதற்கு தாக்கினார்கள் என்று தெரியாமலேயே இந்திரா காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜான் மார்க் (வயது 45) என்பவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிநாத் கட்டா(50) என்பவர் அரிவாள் வெட்டில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போயினர்.
கஞ்சா, மதுபோதையில் வெறியாட்டமா?
மேலும் பெரும்பத்து கிராமத்தை சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த நாங்குநேரி போலீசார் கொலையானவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பின் வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல் கஞ்சா, மது போதையில் வெறியாட்டம் ஆடினார்களா? அல்லது திட்டமிட்டு இச்சம்பவத்தை நிகழ்த்தினார்களா? என்று தீவிர விசாரணை நடத்தினர்.
பொதுமக்கள் சாலைமறியல்
கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, தப்பிச் சென்ற மர்ம கும்பலை உடனே கைது செய்ய வலியுறுத்தி நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் பதற்றத்தை தணிக்கும் வகையில், நேற்று இரவு முதலே நாங்குநேரியில் இருந்து மஞ்சங்குளம், பெரும்பத்து வழியாக ஏர்வாடி பகுதிக்கு பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இன்றும் நாங்குநேரி - ஏர்வாடி சாலையில் 2-வது நாளாக மறியலில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். ஏராளமான பொதுமக்கள் நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டதால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
நாங்குநேரி சின்னதுரையை தாக்கிய வழக்கில்
கொலையாளிகளை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி அளித்ததை அடுத்து களைந்து சென்றனர். இந்த நிலையில் அவர்கள் 7 பேரும் நேற்று மாலையில் கைது செய்யப்பட்டனர். தென்னிமலை பகுதியை சேர்ந்த கண்ணன் (20), அந்தோணி மைக்கேல் ராஜ் (19), பருத்திப்பாடு பகுதி உச்சிமகாளி என்ற மண்டை (23), மூன்றடைப்பு வசந்தகுமார் (19), நாங்குநேரி சுப்பையா என்ற சுபாஷ் (19), கல்யாணி (20), நாங்குநேரியை சேர்ந்த இசக்கிராஜா என்ற பிடி ராஜா (19) ஆகிய 7 பேரை பிடித்த போலீசார் மேலும் இருவரை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதில் இருவர் நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரையை தாக்கியவர்கள் என்றும் தகவல் வெளியானது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு பள்ளி மாணவர் சின்னதுரையை தாக்கிய வழக்கில் கைதான கல்யாணி, சுபாஷ் ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications