இந்து கடவுள்களுக்கு எதிராக கருத்து பதிவிட்ட வைகோ முன்னாள் உதவியாளர் கைது!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் இந்துக் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நகர்மன்ற முன்னாள் தலைவரின் மகனும், வைகோவின் முன்னாள் உதவியாளருமான அருணகிரி கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோயில் 1 ஆவது தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி (55). இவர் அருணகிரி சங்கரன்கோவில் என்ற முகநூல் பக்கத்தில் இருந்து தான் பல்வேறு நாடுகளுக்குச் சென்ற பயணங்கள் குறித்த அனுபவங்களை எழுதி வருகிறார்.

இந்நிலையில், அருணகிரி இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து சமுதாய பண்பாட்டினை அவமதிக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் தொடர்ச்சியாக தகவல் பதிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி நகரத் தலைவர் பாடாலிங்கம் என்கிற ராஜா நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் அருணகிரி மீது வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை கைது செய்து சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கைதான அருணகிரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளராக இருந்துள்ளார். அருணகிரியின் தந்தை பழனிச்சாமி சங்கரன்கோவில் முன்னாள் நகர்மன்ற தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications