கொடைக்கானலில் ஓபன் பண்ணிட்டாங்க.. கடவுளே வாழ விரும்பும் இடம்.. தரிசனம் கிடைத்தால் அபிராமி அபிராமி தான்
கொடைக்கானல்: ஒன்றரை மாதங்கள் கழித்து இன்று முதல் தான் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த ஏரியும், அமைந்துள்ள பகுதிக்கும் பயணிக்கும் பாதையும் உண்மையில் இயற்கை அன்னையை நேரில் சென்று தரிசனம் செய்வதற்கு ஒப்பானது. அதை உணரத்தான் முடியும்.. அனுபவித்தவர்களுக்கே ஆனந்தம் புரியும்.
காதலியை விரும்புவர்களின் எண்ணிக்கையை விட இயற்கையை விரும்புவோரின் எண்ணிக்கை இந்த உலகில் மிக அதிகம். இன்றைய மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் பலருக்கும் பயணம் என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகவிட்டது. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்பது இன்றைய வேலைமுறைகளுக்கு ஒத்துவரவில்லை.. சென்னை, பெங்களுர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் டார்க்கெட், டார்க்கெட் என்று ஓடிக்கொண்டிருப்போர், அந்த ஓட்டத்திற்கு நடுவே இயற்கையின் நிழலில் இளைப்பாற விரும்புகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் நினைத்தால் கூட உடனே வரமுடியாத தூரத்தில் தான் இயற்கை தள்ளி நிற்கிறது.

காடுகளே இல்லாத காங்க்ரீட் காட்டில், ஏசி இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இயற்கையை தேடி அடிக்கடி பலர் பயணிக்கிறார்கள். முன்பெல்லாம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்களுக்கு எப்போதாவது தான் பயணிப்பார்கள். இப்போது அடிக்கடி பயணிக்கிறார்கள். இந்த இரண்டு இடங்கள் மட்டுமின்றி, மூணாறு, ஏற்காடு, ஏலகிரி, கொல்லிமலை, தேக்கடி,கொழுக்குமலை, மேகமலை என்ற மலைகளை தேடி பயணிப்பது அதிகரித்துள்ளது. இதேபோல் ஆறுகளையும், அருவிகளையும் தேடி பயணிப்பதும் அதிகமாக உள்ளது.
அப்படி பயணிக்க விரும்புவோர், தவறவிடக்கூடாத இடம் என்றால் அது கொடைக்கானல் பேரிஜம் ஏரி தான். கொடைக்கானல் பேரிஜம் ஏரியும் சரி, அங்குள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஏரியும் சரி, இயற்கையாக உருவாக்கப்பட்டது அல்ல.. செயற்கையாக உருவாக்கப்பட்டது. இதில் பேரிஜம் ஏரி என்பது கொடைக்கானல் மலைப்பகுதியில் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ள மிக தூய்மையான நன்னீர் ஏரி ஆகும். மிகவும் சுவையான இந்த தண்ணீரை குடித்தால் மினரல் வாட்டர் பாட்டிலை தொட்டு கூட பார்க்க மாட்டார்கள். மனித கால்தடமே படாமல் வரும் இந்த தண்ணீர், பல வனவிலங்குகளின் ஜீவாதாரமாகும். மதிகெட்டான் சோலையும் நீர் ஆதாரமும் இந்த பேரிஜம் ஏரி தண்ணீர் தான்.

நன்னீர் ஏரியான இங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், தேனி மாவட்டம் பெரியகுளம் நகருக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள இந்த ஏரி, இயற்கை எழில் கொஞ்சும் கொள்ளை அழகு நிச்சயம் உங்களுக்கு இயற்கையை நேரில் தரிசனம் செய்த அனுபவத்தை தரும். ஆனால் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும்.
பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள மதிகெட்டான் சோலை, தொப்பி தூக்கிப்பாறை, பேரிஜம் ஏரிவியூ ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் இதேபோல் ஏரி பகுதியில் வலம் வரும் வனவிலங்குகளையும் கண்டுகளிக்கலாம். கடந்த ஒன்றரை மாதங்களாக பராமரிப்பு பணி நடந்து வந்த காரணத்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தநிலையில் பராமரிப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து இன்று (மே 29) முதல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று வனச்சரகர் செந்தில் தெரிவித்துள்ளார். பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications