இ-பாஸ் வேலைக்கே ஆகலை..திணறிப் போச்சே கொடைக்கானல்! இப்பவும் நெரிசல் தான்! குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
திண்டுக்கல்: தமிழகத்தில் புகழ்பெற்ற ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில் தற்போது கொடைக்கானல் செல்லும் வழிகளில் தீவிர வாகன சோதனைக்கு பிறகு வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு வெளிமாநிலங்களிருந்து விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று வார இறுதி மற்றும் மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.
கொடைக்கானல் சுற்றுலா:
குறிப்பாக இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், ரோஜா தோட்டம், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கூட்டமாக இயற்கை அழகை கண்டு ரசித்தும் புகைப்படங்களை எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். மேலும் சுற்றுலாப்பயணிகள் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச் சாலையை சுற்றி சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் கூட்டம்:
வார இறுதி நாள் என்பதால் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகையால் நகர் பகுதி மற்றும் பல்வேறு சுற்றுலா தலங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றது. தொடர் விடுமுறை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதனை சரி செய்ய ஆங்காங்கே கூடுதலான போக்குவரத்துக் காவலர்களை பணியமறுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இ பாஸ் விதி:
இ-பாஸ் பிரச்சனை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறையும் என வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதனையும் தாண்டி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்திருக்கிறது. மேலும் கொடைக்கானலில் மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்று கூட குறையவில்லை. தொடர்ந்து பல இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாகவே காணப்படுகின்றனர். இதனால் இ-பாஸில் எவ்வித பிரச்சனையும் இல்லை. மேலும் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் அவர்களும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்கின்றனர். ஆனாலும் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட பிறகும் கூட்டம் அதிகரித்திருப்பதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானல் போக்குவரத்து நெரிசல்:
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக நீதிமன்றம் கடந்த வருடம் இ-பாஸ் முறையை கட்டாயப்படுத்தியது. அதை தொடர்ந்து தற்பொழுது கொடைக்கானல், ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் அதிகப்படியான வாகனங்கள் இங்கு வரக்கூடும் என்பதனால் தற்போது இ பாஸ் குறித்து மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு வரக்கூடிய வாகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய அறிவிப்பை அறிவித்தது. இதில் வார நாட்களில் 4,000 வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என ஒரு ஆணை பிறப்பித்துள்ளது, அதனை தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி முதல் இ பாஸ் சோதனை அமல்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் இ-பாஸ் சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications