கொடைக்கானல் மலைப்பாதையில் இளைஞர்கள் செய்யும் காரியம்.. குமுறும் சுற்றுலா பயணிகள்! என்னதான் நடக்கிறது
திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு தமிழகத்தில் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களிலும் இருந்தும் கூட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி சுற்றுலாப் பயணிகள் நிறைந்த கொடைக்கானலில் இளைஞர்கள் சிலர் ஜாலி என்கிற பெயரில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
எங்கேயாவது டூர் போக வேண்டும் என்று நினைத்தால் உடனே சுற்றுலா பயணிகளின் நினைவுக்கு வரும் இடங்களில் கொடைக்கானல் நிச்சயம் இடம் பெற்று இருக்கும். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கோடை வாசஸ்தலமாகும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து இருக்கும் கொடைக்கானலில் காணப்படும் குளிர்ச்சியான சிதோஷ்ண நிலையும், இயற்கை காட்சிகளும் சுற்றுலாப் பயணிகளின் மனதை லயிக்க செய்யும். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கார்கள், டூரிஸ்ட் வேன்கள், பஸ்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கிறார்கள்.
அடுத்த வாரமும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். கொடைக்கானலுக்கு தமிழகத்தில் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களிலும் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதைக் காண முடிகிறது. அதேபோல வெளி மாநிலங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பேருந்து, வேன்களில் வந்து செல்கிறார்கள்.
இளைஞர்கள் பலரும் தங்கள் நண்பர்கள் குழுவுடன் கார், வேன் போன்றவற்றில் கொடைக்கானலுக்கு வந்து முகாமிடுகிறார்கள். இப்படி கார்களில் வரும் இளைஞர்கள் பலரும் கொடைக்கானல் மலைப்பாதையில் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மலைப்பாதையின் ஆபத்தை உணரவிலை என்பதோடு, பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு அளிக்கும் விதமாக காரை அங்கும் இங்கும் ஓட்டுவது, ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி கத்தி கூப்பாடு போடுவது, மேற்கூரைகளில் அமர்ந்து செல்வது என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள்.
இவ்வாறு பயணிப்பது தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் உணராமல் இளைஞர்கள், ஜாலி என்ற பெயரில் அத்துமீறுகிறார்கள். அதேபோல சில இளைஞர்கள் ஒரு படி மேலே சென்று, மதுபாட்டில்களை வெளியே நீட்டுவது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை சுழற்றுவது என சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இது குறித்து சுற்றுலாபயணிகள் கூறுகையில், "கொடைக்கானலுக்கு தொலை தூரத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பலரும் வந்து செல்கிறார்கள்.
ஆனால், மலைப்பாதையில் வரும் போது சில இளைஞர்கள் ஜாலி என்ற பெயரில் சாகசம் என நினைத்துக்கொண்டு பிறரை அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இதனால், குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சப்படும் நிலை ஏற்படுகிறது.
எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும். ரகளையில் ஈடுபடும் இளைஞர்கள் மீது பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அதேபோல, மலைப்பாதையில் ஊத்து, பெருமாள் மலைப்பகுதியில் புறக்காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications