கூடங்குளம் டூ பச்சைத் தமிழகம்.. சுப. உதயகுமார்
சென்னை: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி பச்சைத் தமிழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி சட்டசபைத் தேர்தலை சந்திக்க இருக்கிறார் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சு.ப.உதயகுமார்.
கட்சி வேலைகள் ஒருபுறம் இருக்க, தொடர்ந்து அணு உலைக்கு எதிரான இவரது போராட்டமும் தொடர்ந்து வருகிறது. உதயகுமாரை தமிழகத்தின் அடுத்த முதல்வராக்க வேண்டும் என பேஸ்புக்கில் ஒரு பக்கம் இயங்கி வருகிறது.

பல்வேறு தடைகளைத் தாண்டி தற்போது நேரடியாகக் கட்சித் தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார் உதயகுமார்.
எத்தியோப்பியாவில் ஆசிரியர்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிறந்தவர் சு.ப.உதயகுமார். முனைவர் பட்டம் பெற்ற இவர் ஆப்ரிக்காவின் எதியோப்பியாவில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர்.

அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு...
1988ம் ஆண்டு முதலே கூடங்குளம் பகுதியில் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வந்தது. அதன் உச்சகட்டமாக மின் உற்பத்திக்கு முதற்கட்டமான எரிபொருள் நிரப்பும் பணி அணு உலையில் துவங்கவிருக்கிறது என இந்திய அரசு அறிவித்ததன் விளைவாக செப்டம்பர் 10, 2012ல் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அணு உலையை முற்றுகையிட்டனர். அப்போது, அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சு.ப.உதயகுமார் அந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

வழக்குகள்...
தொடர்ந்து, அனு உலைக்கு எதிராகப் போராடி வரும் உதயகுமார், இது தொடர்பான பல்வேறு வழக்குகளையும் சந்தித்து வருகிறார்.
ஆம் ஆத்மி...
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அந்த கட்சியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றி பெற இயலவில்லை.
வெளியேறினார்...
அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் தமது கொள்கைளில் இருந்து முரண்படுவதாகக் கூறி, அதில் இருந்து உதயகுமார் வெளியேறினார். தனித்து செயல்பட்டு வந்தார்.
பசுமை தமிழகம்...
தற்போது பச்சைத் தமிழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார் உதயகுமார். 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பச்சைத் தமிழகம் கட்சியும் களமிறங்குகிறது.












Click it and Unblock the Notifications