சற்று முன் வந்த அலர்ட்.. சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடி மின்னலுடன் மழை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணிக்குள் சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். சில இடங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கும். சாலை வழுக்கும் நிலையில் இருக்கும். வாகன நெரிசல் சில இடங்களில் ஏற்படலாம். பழுதான கட்டிடங்கள் சேதம் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன." என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "நேற்று (03-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய 'மிக்ஜாம்' புயல்' வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (04-12-2023) காலை 0830 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா- வடதமிழக கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று 'தீவிர புயலாக' சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications