சுத்துப்போட்ட மேகம்.. அடுத்த 3 மணிநேரம் முக்கியம்! சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் இடி மின்னலுடன் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மிதமான மழையும், 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பல இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை என்பது கொட்டித்தீர்த்து வருகிறது. பல இடங்களில் விட்டு விட்டு மழை என்பது பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் டூவீலர்களில் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் மழைக்கு ஒதுங்கிய வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணி தொடங்கி உள்ளது. தீயணைப்பு துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர், நாகை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications