சென்னை உள்பட 15 மாவட்டங்களுக்கு வந்த எச்சரிக்கை.. நள்ளிரவு 1 மணி வரை மழை வாய்ப்பு- வானிலை மையம்
சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழையம், ராணிப்பேட்டை, வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவானது.இந்த புயல் இன்று இரவு 9 மணி நிலவரப்படி நாகைக்கு கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

அதோடு இந்த புயல் 15 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது.
ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்பட பல இடங்களில் கனமழை பெய்யும். ஒருசில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும் நாளை புயல் கரையை கடக்கும்போது குறைந்தபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடலில் அலைகள் சீற்றத்துடன் இருக்கும். பல இடங்களில் அலைகள் 10 அடிக்கும் மேலான உயரம் வரை எழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நள்ளிரவு 1 மணி வரை மழை வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நள்ளிரவு 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தங்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications