"2ஆவது சம்மர்!" அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பம் ஓவரா தான் இருக்கும்.. அதிர்ச்சி கொடுத்த வெதர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக டெல்லி, ஹிமாச்சல் என வட இந்தியாவில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகளில் நீர் தேங்கி மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல தென்னிந்தியாவில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் கூட கனமழை வெளுத்து வாங்கியது. அங்கு வரலாறு காணாத அளவுக்குக் கனமழை கொட்டி தீர்த்தது. வெள்ளம் வடியவே சில நாட்கள் வரை ஆனது.
வெப்பம்: ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு நேர்மாறான ஒரு வானிலையே நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பம் கொளுத்தி வருகிறது. கோடைக்கு இணையான வெப்பமே தமிழ்நாட்டில் பல இடங்களில் பதிவாகியுள்ளது. மாநிலத்தில் பல இடங்களில் 100+ டிகிரி பாரன்ஹூட்டை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ளார். இப்போது அதீத வெப்பம் நிலவும் நிலையில், இதனை அவர் இரண்டாம் சம்மர் என குறிப்பிடுகிறார். அடுத்த ஒரு வாரத்திற்குச் சென்னையில் இப்படி தான் வெப்பம் மிக மோசமாக இருக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்: அதிகபட்சமாகத் தமிழ்நாட்டில் சில இடங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ், அதாவது 104 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் இருக்கும் என கூறியுள்ளார். சென்னையிலும் கூட வெப்பம் அதிகமாகவே இருக்குமாம்.. அதேபோல நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் கூட பெரியளவில் மழை இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு 2ஆவது கோடை வெயில் தொடரும்... சென்னையில் வெப்பம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். திருச்சி, தஞ்சாவூர், நாகை, கடலூரில் 39 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பம் இருக்கும். அதேபோல மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி பெல்ட்டில் 40 டிகிரி செல்சியஸாக வெப்பம் இருக்கும்.. கேரளாவிலும் பெரிய அளவில் மழை இருக்காது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

வானிலை: எனவே, அடுத்த ஒரு வாரத்திற்கும் அதிக வெப்பமே இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே சென்னை வானிலை மையமும் வரும் காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications