பெங்களூரிலிருந்து சென்னை விரையும் 3 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள்! மிக் ஜாம் புயல் அப்டேட்!
சென்னை: சென்னையில் மழை வெள்ளப் பாதிப்பு கை மீறி சென்றுகொண்டிருப்பதால், பெங்களூரிலிருந்து 3 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் சென்னை விரைகின்றன.
அரக்கோணத்திலிருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஏற்கனவே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் கூடுதல் மீட்புக் குழுக்கள் வரவழைக்கப்படுகின்றன. இது குறித்த முழு விவரம் வருமாறு;

''மிக்ஜாம் புயலால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விரைந்துள்ளனர்.
மேலும், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 250 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 குழுக்கள் பெங்களூரிலிருந்து வரவழைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.''
இதனிடையே நேற்றிரவு மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், தேவைப்பட்டால் மத்திய அரசிடம் உதவி கேட்போம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications