இன்று இரவுக்குள் சென்னை, மதுரை என 32 மாவட்டங்களில் மழை பிச்சு உதறப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: இன்று இரவு 7 மணிக்குள் சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 10) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: இந்த நிலையில், இன்று (இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 நாட்களுக்கு: தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளையும் மழை: நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 15 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல் கடலூரில் 14 செ.மீ, சேலம் 12 செ.மீ, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 10 செ.மீ மழை பரவலாக பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications