இங்கே டெல்லி பயணம்.. இடையே உதயநிதிக்கு போனை போட்ட ஸ்டாலின்.. சேலத்திலிருந்து கிளம்பி.. பரபர
திருநெல்வேலி: விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் இருந்த போது அவருக்கு முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து முக்கியமான சில உத்தரவுகள் வந்ததாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவுக்கு சூழ்ந்த மழைநீர் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

தென் தமிழ்நாட்டில் பெய்யும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தென் மாவட்டங்களை நோக்கி அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளனர். அதேபோல் விரைவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தென் மாவட்டங்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலத்தில் இருந்து நெல்லைக்கு சென்று உள்ளார். அவர் நேற்று சேலத்தில் இருந்தார். அங்கே திமுக மாநாட்டு பணிகளை நேற்று பார்வையிட்டார். இந்த நிலையில் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் போன் செய்ததாக கூறப்படுகிறது.
நெல்லை நிவாரணப் பணியில் ஈடுபடுங்கள், உடனே கிளம்புங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவசர அவசரமாக திருநெல்வேலிக்கு புறப்பட்ட அவர்.. திருநெல்வேலி பெல் பள்ளி வளாகத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஸ்டாலின் டெல்லி பயணம்: முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார். டெல்லியில் அவர் "இந்தியா" கூட்டணி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். அதன்பின் பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள நிவாரண நிதியை கேட்க உள்ளார். இதன் காரணமாகவே அவர் நெல்லைக்கு செல்லாமல்.. உதயநிதி ஸ்டாலினை அனுப்பி உள்ளார். தூத்துக்குடியில் கனிமொழி இருக்கும் நிலையில் நெல்லையிலும் ஒரு டாப் தலைவர் இருக்க வேண்டும் என்பதால்.. நெல்லைக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார். பெரும்பாலும் நாளை மறுநாள் ஸ்டாலின் நெல்லைக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
உத்தரவு: அமைச்சர்கள் உடனே நெல்லைக்கு புறப்பட வேண்டும், தென் மண்டல எம்பிக்கள் தென் தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்த தகவலில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு. அதி கனமழையினை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதிகாரிகள் நியமனம்: மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் பின்வரும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்:
கன்னியாகுமரி - திரு. சு. நாகராஜன் இ.ஆ.ப., நில நிர்வாக ஆணையர்.
திருநெல்வேலி- - டாக்டர் இரா. செல்வராஜ். இ.ஆ.ப., அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
தூத்துக்குடி - திருமதி.பா.ஜோதி நிர்மலா இ.ஆ.ப., அரசு செயலாளர். வணிகவரித் துறை
தென்காசி - திரு.சுன்சோங்கம் ஜதக் சிரு, இ.ஆ.ப., அரசு செயலாளர். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை
ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications