வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழ்நாட்டில் 22ஆம் தேதி வரை மழை.. வானிலை அலர்ட்!
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் மே 22ஆம் தேதி (புதன்கிழமை) தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 22ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்று வரும் 24ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை முதல் 21ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிக மிக கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும், மே 22ஆம் தேதியும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 4 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கோடை வெயிலுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. 9 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் தலா 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழையும், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications