’சிகப்பு பூதம்’ கேரளாவே மீளல அதுக்குள்ள டெல்லி? வானிலையில் ஏற்பட்ட கோளாறு? ரெட் அலர்ட் விடுத்த IMD
டெல்லி : கேரளாவில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவின் வடு மாறுவதற்குள் தற்போது டெல்லியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் டெல்லிக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் டெல்லியை சுற்றி மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் டெல்லி, ஹரியானா, நொய்டா பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வந்த நிலையில் வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிரை பலி கொடுத்திருக்கின்றனர். இதனால் கேரளாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.

கேரளாவைப் போலவே டெல்லியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நொய்டா பகுதியிலும் கன மழை பெய்து வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இது மட்டுமில்லாமல் அரியானா, பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சொன்னதைப் போலவே டெல்லியில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிற.து இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் டெல்லியின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் டெல்லியில் அடுத்த ஒரு மணி நேரம் மழை பெய்யும் எனவும், டெல்லியில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. கன மழை காரணமாக டெல்லியில் பல சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அது மட்டுமல்லாமல் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்திருப்பதால் சில இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும் மழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல பகுதிகளில் 2 மணி நேரமாக வாகன ஓட்டிகள் நகர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் பெரிய அளவில் மழை மற்றும் பலத்த காற்று இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் என்சிஆர் பகுதியில் 15 முதல் 20 கிலோமீட்டர் வரை கரு மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் டெல்லி, ஹரியானா, மற்ற நொய்டா பகுதிகளில் இந்த ஆண்டில் மிகக் கடுமையான புயல் மற்றும் மழை பாதிப்பு இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் நிலையில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டுமே 11 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications