பயங்கர "தலைவலி.." ஜிம்மில் 32 வயது இளைஞன் துடிதுடித்து மரணம்! அதீத வெப்பம் காரணமா? என்ன நடந்தது
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்த நபருக்கு திடீரென தலைவலி ஏற்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்களுக்கும் கூட திடீர் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, உயிரே போகும் நிகழ்வுகள் நடக்கிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

தலைவலி: அங்கு வாரணாசியில் உள்ள ஒரு ஜிம்மில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. நேரம் செல்ல செல்ல தலைவலி குறையும் என அவர் நினைத்துள்ளார். இருப்பினும், அவருக்குத் தலைவலி சரியாகவில்லை. இந்தச் சூழலில் அவர் தலைவலியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான பகீர் சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த இளைஞர் திடீரென அப்படியே தலையில் கைவைத்தபடி கீழே அமர்கிறார். அவருக்கு எதோ சிக்கல் என்பதை உணர்ந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக உதவிக்கு விரைகிறார்கள். அவரை உட்கார வைத்துவிட்டு அவருக்குத் தண்ணீர் கொடுக்கிறார்கள். மற்றவர்கள் அவரது முதுகு மற்றும் தலையை மசாஜ் செய்கிறார்கள்.
உயிரிழப்பு: இருப்பினும், அவருக்குத் தலைவலி குறையவில்லை. இதனால் அவர் நடுங்குவதும் கூட சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த அந்த நபர் தீபக் குப்தா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஏதோ புதிதாக ஜிம் சேர்ந்து, ஒர்க் அவுட் செய்யத் தெரியாமல் செய்யும் நபர் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே அவர் தொடர்ந்து ஜிம் சென்று வருகிறாராம். மேலும், தொடர்ச்சியாக பல்வேறு உடற்பயிற்சி போட்டிகளிலும் அவர் தொடர்ந்து கலந்து கொண்டுள்ளார். இந்தச் சூழலில் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன: இருப்பினும், அவர் உயிரிழக்க என்ன காரணம் என்பது துல்லியமாகத் தெரியவில்லை. மருத்துவ அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
கோடை வெப்பம்: அதேநேரம் நமது நாட்டில் சமீப நாட்களாகவே கோடை வெப்பம் அதிகரித்தே வருகிறது. அதிலும் நேற்றைய தினம் எல்லாம் வேலூரில் 111 டிகிரி வரை வெப்பம் உச்சத்திற்குச் சென்றது. வட இந்தியாவிலும் பல பகுதிகளில் வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுவும் கூட அவரது மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், மரணத்திற்குத் துல்லியமான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே தெரிய வரும்.
இருப்பினும், வெப்பம் இந்தளவுக்கு உச்சத்திற்குச் செல்வதால் மதிய நேரங்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே சென்றாலும் அதீத வெப்பத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் ஆடைகளை அணியும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் ஜிம் செல்வது அல்லது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது ரொம்பவே நல்லது.












Click it and Unblock the Notifications