சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பின! உன்னிப்பாக கவனிக்கும் அதிகாரிகள்.. அடுத்து என்ன நடக்கும்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் தற்போது நீர் எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறித்து நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா விளக்கியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. இந்தப் புயல் கரையில் இருந்து சென்னையில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாகச் சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. நேற்றிரவு ஆரம்பித்த கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்றிரவு வரையும் மழை பெய்யும் என்றும் அதன் பின்னரே மழை குறையும் என்றும் கூறப்படுகிறது.
கொட்டும் மழை: இந்த மிக்ஜாம் புயல் இப்போது மிகத் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இது நாளைய தினம் ஆந்திரா அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கனமழை கொட்டி வரும் நிலையில், சென்னையில் இருக்கும் முக்கியமான நீர்பிடிப்பு பகுதிகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
98% நிரம்பிய ஏரிகள்: இதற்கிடையே சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் தற்போது நீர் எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறித்து நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். மேலும், முக்கிய ஏரிகளின் நீர் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருவேளை எதிர்பாராத விதமாக ஏரியின் நீர் வரத்து அதிகமாக இருந்தால், நிலையைப் பொறுத்து ஏரியில் இருந்து சிறிது சிறிதாக நீரைத் திறந்துவிடவும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் இறங்கியுள்ளனர். மேலும், கரையோரம் வசிக்கும் மக்கள் வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே பல இடங்களில் கரையின் அருகில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவசர ஆலோசனை: அடையாறு, கூவம் ஆறுகளில் இரண்டு பக்கமும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 3 லட்சம் பேருக்கு அபாய குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே மழை தொடரும் நிலையில், அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உடன் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆலோசனையில் ஈடுபட்டார்
சென்னையில் மாலை வரை மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே புயல் மழையைச் சமாளிப்பது தொடர்பாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், டிஆர்பி ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மழை தொடர்ந்தால் என்ன செய்யலாம் என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இருக்கும் சிக்கல்: கனமழை கொட்டும் போது அவை ஆறுகள் வழியாகக் கடலில் சென்று சேரும். ஆனால், இப்போது மழை நீர் கடலில் சேர்வதில் சிக்கல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் நிலையில், ஆற்றில் வரும் நீர் கடலில் கலப்பதில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களில் மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications