மிக்ஜாம் புயல் கரையை கடப்பதால் நாளையும் விடுமுறையா? அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சொன்ன பதில்
சென்னை: மிக்ஜாம் புயல் நாளை கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் நேற்றிரவு ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் கூட தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 130 கிமீ தொலைவில் இருக்கிறது. புயல் மழையைச் சமாளிக்கச் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், மழை கொட்டி வருவதால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்: இதற்கிடையே எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டிவே சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "தற்போது வரை மழை நீர் தேங்கியதாகவே அதிகளவில் புகார்கள் வந்துள்ளன. இதைச் சென்னை மாநகராட்சி அல்லது மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் சொல்லி தண்ணீரை அகற்றும் பணிகளைச் செய்து வருகிறது.
நேற்று இரவு முதல் இப்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீரை வெளியேற்றுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், முடிந்தவரை மழை நீரை அகற்றும் பணிகளை விரைவாகச் செய்து வருகிறோம். எங்களிடம் இப்போது 1000 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. மழை நின்றவுடன் இதற்கான பணிகளை ஆரம்பிப்போம்.
புகார்கள்: எங்களிடம் இதுவரை 153 புகார்கள் வந்துள்ளன. அதேபோல ஒவ்வொரு மாவட்டங்களிலும் புகார் மையங்கள் தனியாக உள்ளன. அந்தந்த மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். சென்னையில் வரும் புகார்களை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழை நின்றால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை நீரை அகற்றிவிடுவோம். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தான் இப்போது சிரமம் இருக்கிறது. மழை நின்றவுடன் போக்குவரத்தைச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக அரசு அமைந்த பிறகு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் தான் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. இல்லையென்றால் வெளியே கூட செல்ல முடியாத சூழல் தான் இருந்து இருக்கும். மீதி இருக்கும் 10-15% பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
மழை நீர் கூடுதலாகத் தேங்குவதாகப் புகார் வந்துள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும் இது தொடர்பாகத் தனியாக ஒரு லிஸ்டை வைத்துள்ளனர். மழை நின்றவுடன் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நாளை விடுமுறையா: புயல் என்னதான் நாளை கரையைக் கடக்கும் என்றாலும் கூட அது இன்றே சென்னையைத் தாண்டி சென்றுவிடும். எனவே, இன்று மாலை மழை நின்றுவிடும் என்று எதிர்பார்க்கிறோம். நாளை ஆந்திர பகுதியில் தான் இந்தப் புயல் கரையைக் கடக்க உள்ளது. எனவே, நாளை விடுமுறை விட அவசியம் இருக்காது என்றே நினைக்கிறோம். இருப்பினும், விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் இருந்தால் அது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
நேற்று 2.5 கோடி பேருக்கு எச்சரிக்கை எஸ்எம்எஸ் அனுப்பி இருக்கிறோம். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்பது மட்டுமே எங்கள் கோரிக்கை. மழை நின்றதும், தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே சற்று நேரத்திற்கு முன்பு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக நாளையும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications