"வெளியே செல்லவே வேண்டாம்.." கொட்டி தீர்க்கும் தீவிர கனமழை! வந்த அலர்ட்.. தவிக்கும் துபாய் மக்கள்
துபாய்: ஐக்கிய அமீரகத்தில் கனமழை கொட்டும் நிலையில், அந்நாட்டு போலீசார் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
பொதுவாகவே வறட்சி அதிகம் இருக்கும் பகுதி தான் மத்திய கிழக்கு நாடுகள்.. அங்கு எப்போதும் பாலைவனத்தைப் போலத் தான் வானிலை நிலவும்.. அதீத வெப்பமே எப்போதும் அங்கு இருக்கும்.

ஓராண்டில் அங்கு சில செமீ மழை பெய்வதே அதிசயம்.. ஆனால் கடந்த சில வாரங்களாக அங்கு நேர்மாறான ஒரு வானிலை நிலவி வருகிறது. பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொட்டும் கனமழை: இதற்கிடையே துபாயில் மோசமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அந்நாட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோசமான வானிலை நிலவும் என்பதால் பொதுமக்கள் தயவுசெய்து கடற்கரைகளில் இருந்து விலகி இருங்கள்.. குறிப்பாகப் படகு பயணங்களைச் செல்வதைத் தவிர்க்கவும். பள்ளத்தாக்கு பகுதிகள், கனமழை மற்றும் தாழ்வான இடங்களைத் தவிர்க்கவும், வாகனங்களை ஓட்டும்போது எச்சரிக்கையாக இருங்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வானிலை மோசமாக மாறலாம் என்பதால் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முறையாகக் கடைப்பிடிக்குமாறும் துபாய் போலீசார் மக்களைக் கேட்டுக்கொண்டது.. அடுத்து வரும் நாட்களில் ஐக்கிய அமீரகத்தில் மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு: ஐக்கிய அமீரகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அங்குள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மழை மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுவதால் பல பள்ளிகள் இந்த வாரம் நேரடி வகுப்புகளை ரத்து செய்துவிட்டு ஆன்லைனில் வகுப்புகளை அறிவித்துள்ளன. மழை கொட்டும் என்பதால் துபாயில் உள்ள துறைமுகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்போர்ட்: சீரற்ற வானிலை நிலவும் என்பதால் துபாய் ஏர்போர்ட்டும் பயணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மோசமான வானிலை காரணமாகப் பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே ஆரம்பிக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. கார் அல்லது பொதுப் போக்குவரத்து என எதில் பயணித்தாலும் தாமதம் ஏற்படும் என்பதால் அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிடுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி ஐக்கிய அமீரகத்தில் வரலாறு காணாத மழை பெய்தது.. இது வளைகுடா நாட்டின் சில பகுதிகளை ஸ்தம்பிக்க வைத்தது.. துபாய் உள்ளிட்ட சில நகரங்களில் அதீத வெள்ளம் ஏற்பட்டது. கடந்த 75 ஆண்டுகளில் ஐக்கிய அமீரகத்தில் இந்த அளவுக்கு மழை பெய்வது இதுவே முதல்முறையாகும்.

உயிரிழப்பு: அப்பகுதியில் கடந்த சில வாரங்களாகப் புயல்களால் பெய்யும் அதீத கனமழையால் ஓமானில் 20 பேரும், எமிரேட்ஸில் 4 பேரும் உயிரிழந்தனர். மழை தொடர்ச்சியாகக் கொட்டி வருவதால் துபாய் மற்றும் ஷார்ஜாவில் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை விட்டால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும் என்று கூறப்படுகிறது.
எல் நினோ: எல் நினோ நிகழ்வு காரணமாகவே இங்கு மழை அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். எல் நினோ காரணமாக இந்த பகுதியில் சுமார் 10-40 சதவீதம் வரை மழை அதிகரித்துள்ளது. மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீர் வெப்பமடைவதே எல் நினோ நிகழ்வாகும். இதனால் உலகின் பல பகுதிகளில் அதிக மழைப்பொழிவு அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications