ஏசி வாங்கியும் பயனில்லையே குருநாதா.. சேலம், ஈரோடு, தருமபுரி பகுதியில் வித்தியாசமான சிக்கல்
சேலம்: வெயிலின் தாக்கம் காரணமாக ஏசி வாங்குவோர் எண்ணிக்கை ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் பகுதிகளில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஆனால் வாங்கிய ஏசி பொறுத்துவதற்கு ஆட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை இருக்கிறது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. வழக்கத்தைவிட பல இடங்களில் வெப்ப அலை வீசுகிறது. சராசரியாக வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் இருக்கிறது.. 100 முதல் 110 டிகிரி வரை வெப்ப நிலை பதிவாகி வருகிறது. மேற்கு மாவட்டங்களான ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் வடமாவட்டங்களான வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் வெயில் இந்தாண்டு வழக்கத்தைவிட மிக கடுமையாக உள்ளது.

வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் இளநீர், தர்பூசணி, மோர், பழ ஜூஸ் போன்றவற்றை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். அதேவேளையில் வெயிலின் தாக்கத்தை குறைக்க வீடுகளில் ஏசி வாங்கி மாட்டவும் விரும்புகிறார்கள். பகல் பொழுது மட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் அனல் குறையாமல் இருப்பதால் பலருக்கு தோல் தொடர்பான வியாதிகள், கொப்புளங்கள் வருகிறது.
இதனால் பொறுத்தது போதும் என்று பொங்கிய மக்கள், நேராக ஏசி விற்கும் கடைகளுக்கு தவணையில் கூட ஏசி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதம் சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி பகுதியில் வெப்பத்தைச் சமாளிக்க ஏசி வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் பல முன்னணி நிறுவனங்களின் ஏசி கிடைப்பதற்கு சில ஊர்களில் காத்துக்கிடக்கும் நிலை இருக்கிறது. சில நாட்கள் வரை காத்திருந்து தான் ஏசி வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. ஏசி விற்பனை அதிகரித்துள்ள நிலையில், வாங்கிய ஏசிக்களை மாட்டுபவர்கள் குறைவாக உள்ளதால் அவர்களுக்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஏசி வாங்கி ஐந்து நாள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறுகிறார்கள் மக்கள்.
ஏசி வாங்குவோர் கடந்த மார்ச் மாதம் முன்பே வாங்கியிருந்தால் தப்பித்திருப்பார்கள்..அவசரத்திற்கும் நமது அசவுகரித்திற்கும் வாங்கும் போது, காலம் நமக்கு சாதகமாக உடனே மாறுவது இல்லை..ஏசி மாட்டுவோருக்காகவும் ஏசிக்காவும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications