அடுத்த 3 மணி நேரம்.. வெயிலே இருக்காது.. பிச்சு உதறப்போகும் மழை.. சென்னை + 17 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை மற்றும் இரவில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோவை என 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் சீசன் நடந்து வந்தாலும் பெரும்பாலான நாட்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை கொளுத்தி எடுத்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியிருந்தாலும் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியினை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரிதாக வெயில் பதிவாகவில்லை.

17 மாவட்டங்கள் என்னென்ன?
பல நாட்களில் கோடை மழையே பெய்துள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடனும், ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. நேற்று மாலை மற்றும் இரவு கூட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொளுத்தி எடுத்தது. புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருப்பத்தூர், சேலம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காரைக்கால் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது.
இன்றும் தமிழகத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
"தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, கோவை, தேனி மற்றும் திருப்பூர் ஆகிய 17 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இன்று எங்கு மழைக்கு வாய்ப்பு
முன்னதாக இன்று 13 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22 ஆம் தேதி வரை
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாளை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மே 21ம் தேதி மற்றும் மே 22ம் தேதி அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையை பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications