10 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.. ஆற்றங்கரையோர மக்கள் கவனமாக இருங்க.. நெல்லை கலெக்டர் வார்னிங்
சென்னை: தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு 10 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டு வழக்கத்தை விட சற்று தாமதாகவே தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் முடிவு பெறும் பருவமழை நடப்பு ஆண்டு ஜனவரியிலும் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இதேபோல் நாளை 9 ஆம் தேதி தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து நாளை மறுநாள் 10 ஆம் தேதியும் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு 10 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும், ஆடு மாடுகளை ஆற்றில் இறக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடப்பு சீசனில் வடகிழக்கு பருவமழையால் நல்ல மழை பெய்துள்ளது. இன்னும் வடகிழக்கு பருவமழை முடியாமல் பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதிவரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்கவும். யாரும் ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை இறக்கவோ வேண்டாம். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. இரண்டு மாவட்டங்களிலும் ஏரளாமானோர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது பெய்த மழையிலேயே அங்குள்ள அணைகள், ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதாலும், தற்போது மேலும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும்.
அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீதின் அளவும் அதிகமாக இருக்கும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்பு பெய்த மழையின் போது தாமிரபரணி ஆற்றங்கையோரம் பகுதியில் வசித்து வருபவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications