அடுத்த 2 மணி நேரம்.. நெல்லை, தென்காசி உள்பட 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி உள்பட லேசான இடி மின்னலுடன் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் வெயில் கொளுத்தி எடுக்கிறது. பகல் நேரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவாகி வருவதால், மக்கள் வெளியில் செல்லவே அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக மதிய நேரங்களில் வெப்பம் தகிக்கிறது. எனினும் கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

காலையிலேயே மழை
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று மதியத்திற்கு பிறகு கோவை, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. இதேபோன்று இன்று காலை முதலே நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
காலை 6 மணி முதலே மழை பெய்ய தொடங்கியது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று காலை 6.30 மணியளவில் கடையம், பொட்டல்புதூர், இடைகால், பாவூர்சத்திரம் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டத்தொடங்கியது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- "தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இன்று சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் நேற்று மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை) 6, எண்ணூர் AWS (திருவள்ளூர்) 4, பாரூர் (கிருஷ்ணகிரி), வேலூர் (வேலூர்) தலா 3, மண்டலம் 03 மாதவரம் (சென்னை), உசிலம்பட்டி (மதுரை), செங்குன்றம் (திருவள்ளூர்), பாலகோடு ARG (தர்மபுரி), காட்பாடி (வேலூர்), பாலக்கோடு (தர்மபுரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை) தலா 2 செமீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications