அடுத்த 3 மணி நேரம்.. இடைவிடாமல் கொட்டப் போகுது மழை.. தென்காசி உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. அடுத்த 3 நாட்களுக்கும் வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டில் சீக்கிரமாகவே தொடங்கியது. அதோடு மழையும் முன்கூட்டியே வெளுத்து எடுத்தது. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை கொட்டி வந்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மழை வெளுத்து எடுத்தது. அதன்பிறகு சில நாட்கள் மழை குறைந்தது. பிறகு மீண்டும் மழை தொடங்கியது.

4 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்
இப்படியே இடையிடையே வெயிலும் மழையும் மாறி மாறி கிளைமேட் இருந்து வந்தது. எனினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழையும், லேசான மழையும் என தொடர்ந்து ஜில் கிளைமேட்டே இருந்து வருகிறது.
இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான வானிலை அறிவிப்பில், "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்கள்
முன்னதாக இன்று மதியம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 9 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-07-2025 மற்றும் 11-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12-07-2025 மற்றும் 13-07-2025: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று எப்படி?
சென்னையில் இன்று (07-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (08-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில் இன்று தொடங்கி நாளை மறுநாள் வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், 07-07-2025 முதல் 09-07-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 07-07-2025 முதல் 09-07-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications