கொளுத்தும் வெயிலுக்கு பிரேக்.. அடுத்த 2 மணி நேரம்.. கோவை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் போல வெப்பம் அனலை கக்கி வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் கோவை, தூத்துக்குடி, தேனி உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடைக் காலம் போல வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெளியில் சென்றாலே வியர்த்துக்கொட்டும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. தென் மாவட்டங்களில் பெய்த மழையினால், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

கொளுத்தும் வெயில்
இதன்பிறகு கடந்த 5 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெயிலும் அடித்தது. சில நேரங்களில் மழையும் பெய்தது. ஒரே நேரத்தில் மாறி மாறி கிளைமேட் இருந்தது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்தது. காலையில் இருந்து மதியம் வரை வெயில் சுட்டெரித்து வந்தநிலையில், மதியம் 2 மணிக்கு பிறகு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
8 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
குறிப்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை மைய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
"தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை கோவை, தேனி, நீலகிரி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பகல் முழுவதும் சுட்டெரித்த வெயிலில் இருந்து ஓரளவு தப்ப முடியும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெப்பநிலை எப்படி?
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று முதல் 23 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு இன்று தொடங்கி 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு இன்று முதல் 21 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா?
இன்று (17-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (18-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications