செம மின்னல் கூட்டம்! 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம்!
சென்னை: தென்மேற்கு பருவமழை காலத்தில் சென்னை விமான நிலையத்தில் பெய்த மழையின் அளவு கடந்த 200 ஆண்டுகளில் 3ஆவது மிகப் பெரிய எண்ணிக்கை என சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழைக்கு குட் பை சொல்லிவிட்டு வடகிழக்கு பருவமழையை வரவேற்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அவ்வப்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்தது. பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை மிரட்டியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருந்தனர்.
இந்த மழை விட்டுவிட்டு விடிய விடிய வரை தொடர்ந்தது. இதனால் 12 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தன. அது போல் மேலும் 11 விமானங்கள் தாமதமாக வருகை தந்தன. இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கி மக்களுக்கு போக்குவரத்து பாதிப்பை கொடுத்தது.
நேற்று 30 முதல் 45 நிமிடங்களுக்கு மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கும் அளவுக்கு கனமழை இடி, மின்னலுடன் வெளுத்தது. பழவேற்காடு முதல் செய்யார் வரை கனமழை பெய்தது. சென்னையின் சில இடங்களில் வானில் இருந்து வெடித்து சிதறியது போல் மழை பெய்ததால் மக்கள் அச்சமடைந்தனர். ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மின்னல் தரையிறங்கியது.
இதே நிலைதான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் ஏற்பட்டது. இந்த நிலையில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை கனமழை நீடித்தது. இந்த மழையின் அளவு குறித்து சென்னை ரெயின்ஸ் ட்விட்டர் கூறியிருப்பதாவது: நேற்று சென்னை விமான நிலையத்தில் 34 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் விமான நிலைய பகுதியில் இதுவரை பதிவான மொத்த பருவமழையின் எண்ணிக்கை 823 மி.மீ. ஆகும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் கடந்த 200 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையானது 3ஆவது அதிக எண்ணிக்கையாகும். நுங்கம்பாக்கத்தில் இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் 646 மி.மீ. மழை பெய்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications