சென்னை மக்களுக்கு புது அலர்ட்! அடுத்த 2 நாட்களுக்கு கனமழை விடவே விடாது! வேற எங்கெல்லாம் மழை இருக்கு?
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை இப்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டும். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக அடையார், வேளச்சேரி, ஆவடி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 30 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர சென்னையில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழையே பெய்துள்ளது.

வானிலை மையம்
வரும் நாட்களில் நிலவும் வானிலை தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (02-10-2025) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய (ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மாலை 1700 மணி அளவில் தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் கோபல்பூருக்கு அருகில் கரையைக் கடந்தது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
சௌராஷ்ட்ரா கடலோரப்பகுதிகள் மாற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 01-10-2025 காலை வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நகர்ந்து, அன்று மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அன்று நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று, 02-10-2025 அன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (03-10-2025) காலை 0830 மணி அளவில் துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது
இது, அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். பிறகு, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், சற்று மேற்குத் திசையில் நகர்ந்து, பின்னர் மேற்கு-தென்மேற்கே நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும்.
சென்னை மழை
இதனால் இன்று அக்டோபர் 3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை அக்டோபர் 4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்
அக்டோபர் 5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் செப்டம்பர் 6 முதல் 9 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை இருக்கு
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (03-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (04-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-34° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழகக் கடலோரப்பகுதிகளில் இன்று தென் தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று வடமேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திரா - ஒரிசா - மேற்கு வங்ககடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை வடமேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடக்கு ஆந்திரா - ஒரிசா - மேற்கு வங்ககடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications