வடிகிறது தண்ணீர்.. நாலாபக்கமும் பறந்த ஆபிசர்ஸ்.. சுழலும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்.. விறுவிறு பணி
சென்னை: சென்னையில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. கொட்டும் மழையிலும், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பலத்த மழை கொட்டி வருவதால், சென்னையே தனித்தீவு போல காணப்படுகிறது.. சாலைகளில் எல்லாம் நீர் பெருக்கெடுக்கிறது.. இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்-

சென்னை: சென்னை மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், ராயப்பேட்டை, சாந்தோம், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, தி.நகர், வடபழனி, வள்ளுவர் கோட்டம், அடையாறு, திருவான்மியூர், கிண்டி, அசோக் நகர், கே.கே.நகர், சாலிகிராமம், வளசரவாக்கம், கோடம்பாக்கம், பகுதிகளின் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டுள்ளது.
கோயம்பேடு, முகப்பேர், அண்ணாநகர், அமைந்தகரை, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், பாரிமுனை, சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் ஆவடி, சோழவரம், செம்பரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், கொட்டூர், பூண்டி, பகுதிகளின் சாலைகள் மொத்தமும் தண்ணீரால் மூழ்கியுள்ளது.
தாம்பரம்: தாம்பரத்தில் ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி பிரதான சாலை, ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலை மற்றும் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாலைகளில் முறிந்துள்ளன. அவற்றை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டிலிருந்து வர வேண்டாம் என்று தாம்பரம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் தாம்பரத்தில் 7 வழித்தடங்களில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
அதேபோல, அண்ணாநகர், வில்லிவாக்கம், அயனாவரம், அமைந்தகரை, டி.பி.சத்திரம், திருமங்கலம் ஆகிய பகுதியில் அண்ணாநகர் மண்டல குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் துணை பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் குடிநீர் வாரிய ஊழியர்கள், கால்வாய்களை தூர்வாரும் பணியை தீவிரம்படுத்தி வருகிறார்கள்.
பலத்த காற்று: பலத்த காற்று வீசு வருவதால் ஆங்காங்கே மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன.. இதை கொட்டும் மழையிலும், இடுப்பு வரை தேங்கி இருக்கும் தண்ணீரிலும் இறங்கி அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இடைவிடாமல் மழை பெய்து வருவதால், நிவாரண பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கொட்டும் மழையிலும், பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் இந்த பணிகளை, சென்னைவாசிகள் நெகிழ்ந்து பாராட்டியும், நன்றி சொல்லியும் வருகின்றனர். பணியில் உள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
உணவு: இதுவரை, 1,39,000 பேருக்கு மாநகராட்சி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம், அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ந்து உணவு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மழைநீர் தேங்கிய சாலைகளில் இப்போது போக்குவரத்து சீராகி வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்... செய்தியாளர்களிடம் பேசும்போது, "மழைநீர் வடிகால்கள், தற்போது மழை நீரை உள்வாங்க தொடங்கியுள்ளன. சென்னை, பெருங்குடியில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கால்வாய்களில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
தரைத்தளம்: பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவற்றில் தண்ணீர் வெளியேறி வருவது மகிழ்ச்சியான செய்தி. தண்ணீர் தேக்கம், முதியோர்கள் தரைத்தளத்தில் இருப்பது குறித்த புகார்கள்தான் வந்துள்ளன. நள்ளிரவில் சாலைகளில் இருக்கும் தண்ணீர் வடிந்துவிடும்.. மற்றவை மோட்டார் மூலம் வெளியேற்றிவிடுவோம்.
சென்னையில் மீட்புப்பணி மேற்கொள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து 5,000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இரவு 12 மணிக்கு மேல் மழை குறைய வாய்ப்பு உள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.. அதேபோல வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனுடன் தொடர்பில் இருக்கிறோம்" என்றார் ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications