சும்மா பில்டப் கொடுக்கிறாங்க.. சென்னையில் பெய்தது இயல்பான மழை தான்.. எடப்பாடி பழனிசாமி
சென்னை: சென்னை மாநகரில் வெறும் 7 செமீ மழை தான் பெய்தது. இது இயல்பாக பெய்யக்கூடிய மழைதான். இந்த மழை நீர் சாதாரணமாகவே 5 முதல் 6 மணி நேரத்தில் வடிந்துவிடும். ஆனால் சென்னையில் ஸ்டாலின் அரசாங்கம் செய்த ஏற்பாட்டினால் தான் மழை நீர் வேகமாக வடிந்தது என்று மீடியாக்கள் பில்டப்பை ஏற்படுத்திவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. சென்னையில் கடந்த ஒரு வாரம் வெயில் தான் அடித்தது. குளிர்ச்சியான கிளைமேட் நிலவி வந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்ட ஆரம்பித்தது. நேற்று முன் தினம் சென்னையில் நல்ல மழை பெய்தது. நேற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று ஒரே நாளில் 11 செமீ மழை பெய்ததாக கூறப்படுகிறது. சென்னை ஓஎம் ஆர் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திலும் 2 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டியது. கடலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தனர். குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகரில் வெறும் 7 செமீ மழை தான் பெய்தது. இது இயல்பாக பெய்யக்கூடிய மழைதான். ஆனால் இதனை பில்டப் பண்ணுகிறார்கள் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கனமழை பெய்யும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த புயலால் விழுப்புரம் மற்றும் கடலூரில் மிக கனமழை பெய்தது. விழுப்புரத்தில் குறிப்பாக மயிலம் பகுதியில் 50 செமீ மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்தது. இரண்டு மாவட்டங்களிலும் அதிக மழை பெய்திருக்கிறது.
சுற்றியுள்ள விளை நிலங்களில் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. சவுக்கு, கடலை, பயிரிடப்பட்டிருகின்றன. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் இவை அனைத்தும் சேதமடைந்துள்ளன. எனவே முதல்வர் ஸ்டாலின் அனைத்து பாதிப்புகளையும் பார்வையிட்டு முறையான இழப்பீடு வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் இந்த வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இதனை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் முறையாக பார்வையிட்டு முறையான இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
சென்னை மாநகரில் வெறும் 7 செமீ மழை தான் பெய்தது. இது இயல்பாக பெய்யக்கூடிய மழைதான். இதில் வெள்ளநீர் சாதாரணமாகவே கடந்துவிடும். 5, 6 மணி நேரத்தில் வெள்ள நீர் வடிந்துவிடும். ஆனால் இதனை மீடியாக்கள் பெரிதாக காட்டியது. ஊடகங்களும், பத்திரிகைகளும் மிகப்பெரிய பில்டப்பை ஏற்படுத்தி, சென்னையில் ஸ்டாலின் அரசாங்கம் செய்த ஏற்பாட்டினால் தான் மழை நீர் வேகமாக வடிந்தது என்று ஒரு தவறான தகவலை பரப்புகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் தமிழகத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எழுப்புவது எங்களது கடமை.. அதனை நாங்க செய்து வருகிறோம். இதேபோல் இதற்கு முறையாக பதில் அளிக்க, அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் அதனை இந்த முதலமைச்சரிடம் எதிர்பார்க்க முடியாது. பொம்மை முதல்வராக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. புயல் காலத்தில் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது சென்னையில் வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. மழை பெய்யும் போது சில இடங்களில் மழைநீர் தேங்கினாலும், மழை நின்றதும் வடிந்து விட்டது என்றும் இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு ஓரிரவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் காலம் நமது ஆட்சிக் காலம் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மேற்கண்டவாறு விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications