சென்னையில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடும்! வானிலை ஆய்வு மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வந்தது. தற்போது மழையின் தீவிரம் குறைந்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் என தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக.24 முதல் 27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (21-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (22-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை சராசரியாக 192.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இந்த காலத்தில் இயல்பான மழையின் அளவு 178.5 மில்லி மீட்டர் மட்டுமே. அப்படி எனில் இயல்பான மழையை விட 8 சதவீதம் அளவுக்கு மழை தமிழகத்தில் கூடுதலாக பெய்திருக்கிறது. ஆனால் தனித்தனி மாவட்டமாக பார்க்கும் பொழுது சில மாவட்டங்களில் குறைவாகவும் சில மாவட்டங்களில் அதிகமாகும் மழை பதிவாகி இருக்கிறது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் மழை இயல்பை விட 10 சதவீதம் குறைவாகவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 சதவீதம் குறைவாகவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19% குறைவாகவும் பெய்திருக்கிறது.
அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 53 சதவீதம், மதுரையில் 32 சதவீதம், ராமநாதபுரத்தில் 40 சதவீதம், திருப்பூர் மாவட்டத்தில் 49 சதவீதம், தூத்துக்குடியில் 67 சதவீதம், விருதுநகரில் 44 சதவீதம் என மழை இயல்பை விட குறைவாக பெய்திருக்கிறது. அதேபோல திருநெல்வேலி மாவட்டத்தில் மழை இயல்பை விட 351% அளவுக்கு கூடுதலாக பெய்திருக்கிறது. தேனியில் 56 சதவீதம், தென்காசியில் 95 சதவீதம், புதுச்சேரியில் 48 சதவீதம், மயிலாடுதுறையில் 66 சதவீதம், காரைக்காலில் 41 சதவீதம், கோயம்புத்தூரில் 54 சதவீதம் என மழை இயல்பை விட அதிகமாக பெய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications