சென்னையில் இன்றும், நாளையும் மழை வெளுக்கும்.. கோவை, நீலகிரிக்கு நாளை கனமழை அலர்ட்.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் நேற்று வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது. வெயில் வழக்கத்துக்கு மாறாக அதிகம் கொளுத்தி எடுத்தது. நேற்று மட்டும் 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது. குறிப்பாக நெல்லை பாளையங்கோட்டையில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. க.பரமத்தி, ஈரோடு, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

"வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுவை காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலையும் இயல்பை விட அதிகமாக இருக்கும். 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக கூடும். இதேபோன்று தலைநகர் சென்னையை எடுத்துக்கொண்டால் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும் நாளையும் சென்னையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications