சென்னை அருகே மிக்ஜாம் புயல் டேரா! மக்களுக்காக திறக்கப்பட்ட லயோலா கல்லூரி கதவுகள்! தயாராகும் உணவு
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைய லயோலா கல்லூரியில் தங்குவதற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. காலையில் சென்னை கடல் பகுதியை நெருங்கும் போது சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலை முதலே சூறைக் காற்று வீசி வருகிறது.

இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகள் உடைந்து மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.
இதனால் அந்த பகுதிகள் எல்லாம் தனித்தீவுகள் போல் காட்சி அளிக்கின்றன. தாம்பரத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அது போல் படகுகள் அனுப்பப்பட்டு அதன் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த புயலால் இன்று நள்ளிரவு வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது ஆந்திராவின் பாபட்லா அருகே நாளை பகல் கரையை கடக்கிறது. இந்த புயல் மெதுவாக நகர்ந்து செல்வதால் அதிக மழையை கொடுக்கிறது. வேகமாக நகர்ந்துவிட்டால் அந்த அளவுக்கு மழை இருக்காது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் குடியிருப்புகளுக்கு வெள்ளம் வந்து விட்டதால் அவர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருகிறார்கள். உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதற்கு கூட வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் எங்கு மேடு பள்ளம் இருக்குமோ என அச்சத்தில் இருக்கிறார்கள். ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டதால் பேச்சிலர்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் இடமில்லாமல் இருப்பவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் தங்கிக் கொள்ள அக்கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சூளைமேடு, கோடம்பாக்கம், நமச்சியவாயபுரம், தியாகராயர் நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் கைக்குழந்தைகளுடன் தஞ்சமடைந்துள்ளனர்.
அந்த கல்லூரியில் ஒரு கட்டடத்தை ஒதுக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு வழங்கவும் லயோலா கல்லூரி ஏற்பாடு செய்து வருகிறது. கல்லூரிக்கு அருகில் இருப்பவர்கள், அவசியத் தேவை இருப்பவர்கள் மட்டும் கல்லூரியில் தங்க வருமாறு கிளாட்சன் சேவியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications