அச்சுறுத்தும் பூதம்.. கடலுக்கு நடுவே ரவுண்டு அடிக்குதாம்! இன்று மழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பிப்ரவரி 27 ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக் கூடும். பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

அதிகபட்ச வெப்ப நிலை : பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். உள் தமிழகத்தில் அதிக வெப்ப நிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 25 - 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் பிப்ரவரி 27 ஆம் தேதி குமரிக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications