இனி நிற்காது போலயே.. அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் விட்டு விளாசப்போகும் மழை! ஜில் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு பக்கம் என்ன தான் கோடை வெப்பம் பட்டையைக் கிளப்பினாலும் இன்னொரு பக்கம் மாலை நேரங்களில் கணிசமாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலை நிலவுகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு வெப்பம் சற்று குறைவாகவே இருக்கிறது என்ற போதிலும், அவ்வப்போது சில இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

மழை
அக்னி நட்சத்திரம் அறிவியல்பூர்வமானது இல்லை என்ற போதிலும், பொதுவாக அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். அதன்படி மே முதல் வாரம் முதல் மாநிலத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகும் மழை தொடர்கிறது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் கூட கடந்த வாரம் கணிசமாக மழை பெய்திருந்தது. இது கோடை வெப்பத்தைக் குளிர்விக்கும் வகையில் அமைந்தது.
அடுத்த 3 மணி நேரம்
இது மட்டுமின்றி மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் மழை தொடர்ந்து பரவலாகப் பெய்தே வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
19 மாவட்டங்களில் மழை
அதன்படி இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருச்சி, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லா, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் டிராபிக் பாதிப்பும் கூட ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
முன்னதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று 14-05-2025 தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications