மோட்டார் போட்டும் மழைநீர் வடியாதது ஏன்? பக்கிங்ஹாம் கால்வாயில் நடப்பது என்ன? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்
சென்னை: மழைநீர் வடியாமல் தேங்கி நிற்க காரணம் என்ன? என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் வடதமிழக கடலோரம் வழியாக ஆந்திரா நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது சென்னையை விட்டு விலகிச் சென்றுவிட்டது. சென்னையிலிருந்து 100 கி.மீ. தூரத்திற்கு அப்பால் உள்ளது. இதனால் இன்று இரவு முதல் மழையானது படிப்படியாக குறையும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறுகையில் சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னை கடற்கரையில் பல மணி நேரமாக மிக்ஜாம் புயல் மையம் கொண்டிருந்தது. சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
50 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்துள்ளது. குறுகிய காலத்தில் மிக கன மழை பெய்த காரணத்தினால்தான் மழை நீர் வடியவில்லை. மேகக் கூட்டங்களால் உருவாகும் மழை, புயல் காரணமாக உருவாகும் மழையால் கடலில் தண்ணீர் உள்வாங்கவில்லை. கூவம், அடையாறு, கொசஸ்தலை, பக்கிங்காம் கால்வாய் இதனுடன் இணைக்கப்பட்ட 31 கால்வாய்கள், நீர் வள ஆதாரமான 13 கால்வாய்கள், இதனுடன் இணைந்துள்ள 3519 கி.மீ, நீளம் கொண்ட மழை நீர் வடிகாலில் உள்ள மழை நீர் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகள் வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கு செல்கிறது.
அந்த இடத்தில் கடல் சீற்றம் காரணமாக மழைநீர் உள்வாங்காத நிலை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. நாங்களும் இந்த மழை குறையும் என்ற எதிர்பார்ப்புடன் செயல்பட்டு வருகிறோம். இந்திய வானிலை மையத்தின் கணிப்பின்படி இரவு 8.30 மணிக்கு மழை குறையும் என்கிறார்கள். இன்னும் சிலர் இரவு 12 மணி வரை மழை இருக்கும் என்கிறார்கள்.

தொடர்ந்து மோட்டார் போட்டு தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தாலும் கடல் நீர் உள்வாங்கிக் கொள்ளாததால் தண்ணீர் வடிவதில் சிரமம் உள்ளது. கடலோரம் இருப்பவர்கள், ஆற்றோரம் இருப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் நடவடிக்கைகளை செய்து வருகிறோம். அது போல் புளியந்தோப்பில் கர்ப்பிணி பெண்ணை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தோம்.
எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கியுள்ளது. மரம் வெட்டும் இயந்திரங்கள் எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. ஆனாலும் மழை நீர் வடிந்தால் மட்டுமே அவற்றை பயன்படுத்த முடியும். எதுவாக இருந்தாலும் மழை நின்ற பிறகு வேகமாக அனைத்து பணிகளும் நடைபெறும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications