அடடே.. வெளுக்கும் கனமழை! சென்னையில் மழைநீர் தேங்க இதுதாங்க காரணமே! வெதர்மேன் சொல்லும் விளக்கம்
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மழை நீர் தேங்குவதற்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை மட்டுமல்லாது, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதலை கனமழை பெய்து வருகிறது.

மேலும், வரும் 17ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேடிசிசி எனப்படும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதை அடுத்து தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்த போதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதிகளான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
நேற்று சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக ஓஎம்ஆர், கந்தன் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது .மேலும் பல்லாவரம், புளியந்தோப்பு, பள்ளிக்கரணை, முடிச்சூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் வெள்ள பாதிப்பு இருக்குமா என சென்னை வாசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மேலும் நவம்பர் மாதத்தில் வழக்கமாக சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்கும் நிலையில் தற்போது அக்டோபர் மாதமே வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் மழை நீர் தேங்குவதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,”சென்னையில் பெய்யும் மொத்த மழையும் நான்கு வழிகளில் மட்டுமே வெளியேறுகிறது. அந்த வகையில் எண்ணூர், நேப்பியார், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம் ஆகிய பகுதிகளில் மட்டுமே தண்ணீர் வெளியேறுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 15 சென்டிமீட்டர் மழை பெய்தால் தாங்க முடியும். 20 சென்டிமீட்டர் மழை பெய்தால் ஒரு நாள் மட்டுமே நீர் தேங்கும். 30 சென்டிமீட்டர் மழை பெய்தால் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர் நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும். 40 சென்டிமீட்டர் மழை பெய்தால் நான்கு நாட்கள் நீர் தேங்கும் சூழலில் தான் சென்னை இருக்கிறது.
அதே நேரத்தில் மழை நீர் வடிகால் என்பது சாலைகளுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. 40 சென்டிமீட்டர் அளவுக்கு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. எனவே அந்தந்த பகுதி மக்கள் சூழலை புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications