ஆந்திரா பக்கம் ஓடிய காற்றழுத்தம்! ஆனாலும் இந்த மாவட்டங்களில் இன்று இரவு கனமழையாமே!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்றை போல் இன்றும் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது போல் இந்த திடீர் மழை ஏன் என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா பகுதிக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்றை போல் இன்று இரவும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். இந்த 4 மாவட்டங்களில் சில பகுதிகளில் நல்ல மழை பெய்யும். சில பகுதிகளில் மழை இருக்காது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, 24 மணி நேர மழையின் அளவு மி.மீ.ரில் பார்க்கலாம். அதிகபட்சமாக மணலியில் 56.4 மி.மீ. ஆகும். அது போல் புழலில் 28.8 மி.மீ. மழை பெய்துள்ளது.
கொரட்டூரில் 23.4 மி.மீ. மழையும் விம்கோ நகரில் 20.4 மி.மீ.மழையும், கொளத்தூரில் 19.5 மி.மழையும் எண்ணூரில் 16.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அது போல் நெற்குன்றத்தில் 15.6 மி.மீ. மழையும், வளசரவாக்கத்தில் 12.9 மி.மீ. மழையும், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 12 மி.மீ.மழையும் பெரம்பூரில் 11.8 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
பள்ளிக்கரணையில் 11.4 மி.மீ. மழையும் ஆலந்தூரில் 10.2 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை மூணாறு போக திட்டமிட்டிருப்பதாகவும் அங்கு வானிலை எப்படியிருக்கும் என்றும் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், தாராளமாக போகலாம். அங்கு வானிலை அச்சமூட்டும் வகையில் இல்லை என்பதை தெரிவித்துள்ளார். அது போல் ஒரு நெட்டிசன், தெலுங்கானா குறித்து கேட்ட போது ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும், இன்று வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது." என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications