இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்.. சென்னையை வறுத்தெடுத்த வெயில்! எவ்வளவு பதிவாகியிருக்குனு பாருங்க
சென்னை: கோடை வெயில் தமிழ்நாடு முழுவதும் வெளுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், சென்னையில் இந்த ஆண்டின் வெப்பமான நாளாக ஏப்.21 பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை நேற்று, மீனம்பாக்கத்தில் 101.5 டிகிரி பாரன்ஹீட், நுங்கம்பாக்கத்தில் 97.2 டிகிரி பாரன்ஹீட் என வெயில் பதிவாகியிருந்தது. வேலுரை ஒப்பிடும்போது வெயிலின் அளவு குறைவாக தெரிந்தாலும், பலவீனமான கிழக்குக் காற்று மற்றும் அதிக ஈரப்பதம் (Humidity) காரணமாக, வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாகவும், மக்களுக்கு மிகுந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வெயில்
அதாவது, அதிக ஈரப்பதம் இருந்தால் வெப்பநிலை 97°F ஆக இருந்தாலும், அது நமக்கு 104°F அல்லது 105°F போலத் தெரியும். ஈரப்பதத்தில் இருக்கும் டேஞ்சரே இதுதான். மனித உடல் தன்னைத் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் மிக முக்கியமான ஆயுதம் வியர்வை. வெயில் அதிகமாகும்போது உடல் வியர்க்கும். அந்த வியர்வை காற்றில் ஆவியாகும்போது, நமது உடலிலிருந்து வெப்பத்தை எடுத்துக்கொண்டு வெளியேறும். இதனால் உடல் குளிர்ச்சியடையும்.
ஏன் சென்னை கொதிக்கிறது?
காற்றில் ஏற்கனவே அதிகப்படியான நீராவி இருக்கும்போது, நமது உடலில் உள்ள வியர்வையை எடுத்துக்கொள்ளக் காற்றிற்கு இடம் இருக்காது. இதனால் வியர்வை ஆவியாகாமல் உடலிலேயே தங்கிவிடும். வெப்பம் வெளியேற முடியாமல் உள்ளேயே தங்குவதால், இதயம் மற்றும் நுரையீரலுக்குக் கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டு நமக்கு அதிக அசௌகரியம் ஏற்படும்.
தமிழ்நாடு முழுவதும் வெயில்
இது போதாது என, தற்போது வீசும் கிழக்குக் காற்று பலவீனமாக இருப்பதால், காற்றில் உள்ள ஈரப்பதம் ஓரிடத்திலேயே தேங்கி நிற்கிறது. இது புழுக்கத்தை அதிகரிக்கிறது. சென்னையில் நேற்று இதுதான் நடந்தது.
சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது.
- வேலூர்: 107.4°F
- கரூர் பரமத்தி: 104.9°C
- மதுரை (விமான நிலையம்): 102.9°C
- திருச்சி: 102.7°C
- ஈரோடு: 102.6°C
வரும் நாட்களில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் வெப்பம் மேலும் சிறிது அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னை மக்களுக்கு ஐடியா
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்க காரணம் ஈரப்பதம்தான். இதிலிருந்து தப்பிக்க, ஏசியை பயன்படுத்துகிறோம். ஏசி வாங்க முடியவில்லை எனில் ஏர் கூலரை பயன்படுத்துகிறோம். இதில் ஏசி தான் பலன் கொடுக்கும். ஏர் கூலர் சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் வேலைக்கு ஆகாது. வேலூர் போன்ற உள் மாவட்டங்களில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அங்கு ஏர் கூலர் சிறப்பாக வேலை செய்யும்.
ஏசியா? ஏர் கூலரா?
ஏர் கூலர் என்பது காற்றில் உள்ள வெப்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரை ஆவியாக்குவதன் மூலம் குளிர்ச்சியைத் தருகிறது. காற்று வறண்டதாக இருந்தால், தண்ணீர் வேகமாக ஆவியாகி நல்ல குளிர்ச்சியைத் தரும். ஆனால், சென்னையில் ஏற்கனவே காற்றில் ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கிறது. சென்னையில் காற்றில் ஏற்கனவே தண்ணீர் நிரம்பி வழிவதால், ஏர் கூலரிலிருந்து வரும் தண்ணீரை ஏற்றுக்கொள்ளக் காற்றிற்குத் திறன் இருக்காது. இதன் விளைவாக, ஏர் கூலர் அந்த அறையில் உள்ள ஈரப்பதத்தை 80% - 90% வரை உயர்த்திவிடும். இது மூச்சு திணறலைதான் ஏற்படுத்தும்.
வேலூர், ஈரோடு போன்ற உட்புற மாவட்டங்களில் காற்று வறண்டதாக இருக்கும். அங்கு ஏர் கூலர் மிகச்சிறப்பாகச் செயல்படும். சென்னையில் ஏர் கூலர் பயன்படுத்துவதாக இருந்தால், தண்ணீர் ஊற்றாமல் வெறும் ஃபேனாக மட்டும் பயன்படுத்துவது அல்லது அறையில் மிகச்சிறந்த காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வது கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications