சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை- சோழிங்க நல்லூரில் ஒரே இரவில் 9 செ.மீ மழை பதிவு!
சென்னை: சென்னை மாநகரின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மாநகரின் பல பகுதிகளில் 2 செ.மீ முதல் 9 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை ஒரே இரவில் 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னையில் நேற்று இரவு 8.30 மணி முதல் கனமழை கொட்டத் தொடங்கியது. சென்னை மாநகரின் அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, எழும்பூர், சேத்துப்பட்டு, கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை வெளுத்தெடுத்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது.
சென்னை மாநகரில் பொதுவாக 2 செமீ முதல் 9 செமீ மழை பதிவானது. சென்னை புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் மட்டும் நேற்று இரவு 8.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரையில் மொத்தம் 9 செ.மீ. மழை பெய்திருக்கிறது. அதாவது ஒரே இரவில் 9 செமீ மழை பெய்ததால் சோழிங்கநல்லூர் பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பநிலையும் 98 டிகிரி பாரன்ஹீட் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications