சென்னைக்கு இன்னொரு ரவுண்டு மழை இருக்கு.. உஷார் மக்களே! COMK அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இரவு 10 மணிக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான COMK தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக x தளத்தில் பதிவிடப்பட்டிருப்பதாவது, "தெற்கு ஆந்திரப் பிரதேசம் (South AP) / வடக்குத் தமிழ்நாடு (North TN) எல்லைப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மேகங்கள் மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.இதன் காரணமாக, ராணிப்பேட்டையின் சில பகுதிகளில் இரவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை மேகங்கள் படிப்படியாக திருவள்ளூர் மாவட்டத்தை நோக்கி நகர்ந்து, பின்னர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு வரும்.

இரவு 10 மணி அளவில் சென்னைக்கு மழையை எதிர்பார்க்கலாம். இந்த மழை மேகங்கள் சென்னையை கடந்து செல்லும்போது சற்று வலுவடைய வாய்ப்புள்ளதால், சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெல்ல நகர்ந்து வட தமிழகத்திற்கு கனமழையை கொடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதேபோல தீபாவளி மற்றும் அதற்கு மறுநாள் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் மழை வடக்கு நோக்கி நகர தொடங்கியது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை என கடலோர மாவட்டங்களிலும், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி என உள் மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், சென்னையில் மழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் சென்னை மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications